Tuesday 23 November 2010

கருணாநிதி பாசிச நிர்வாகமே நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!

தமிழக மாநில கருணாநிதி பாசிச நிர்வாகமே,

நக்சல்பாரி புரட்சியாளர் – மக்கள் ஜனநாயக இளைஞர் கழக தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே! தோழர் ஜீவா மீதான வழக்கினை நடத்திட நிதி தாரீர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை விடுதலை செய்யவும் நிலவுடைமை ஆதிக்கத்தைத் தகர்த்து மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் உதயமானதே நக்சல்பாரிப் புரட்சி இயக்கம். நிலவுடைமைச் சுரண்டல், சாதி தீண்டாமைக் கொடுமை, பெண்ணடிமைத்தனம், கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து போன்ற நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைத்த தொடக்க காலத்திலேயே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம். மாணவப் பருவத்திலிருந்து புரட்சிகர அரசியலில் ஊன்றிச் செயல்பட்டு வரும் தோழர் ஜீவா கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அப்புசாமி செட்டியார் என்கிற கொடிய நிலப்பிரபுவை கொன்றொழித்ததாக 1976ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஜீவா கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு 1998லேயே காலாவதியாகி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இந்நிலையில் தோழர் ஜீவாவைக் கைது செய்தது ஏன்?


தன்னியல்பு அரசியல் வழியை நிராகரித்து புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் முன்னணிகளை வென்றெடுத்து அமைப்பாக்கும் பாரிய பணியைச் சிரமேற்கொண்டு செயல்பட்டுவரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு முன்னணி ஊழியராய் செயல்பட்டுவந்த தோழர் ஜீவாவை கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க. வின் அரசியல் மீது தொடுக்கப்படும் தாக்குதலே.


1990களில் சர்வதேச அளவில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் தகர்ந்தபின், தனக்குப் போட்டியாளன் இல்லாத நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகைத் தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்ட காலத்தில், அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசை அமெரிக்காவின் புதிய காலனியாக - முழு அடிமை நாடாக ஆக்கும் நோக்கத்தில் உலகமயக் கொள்கைகளை அமூல்படுத்த வேண்டுமென இந்திய அரசை உலக வங்கியின் மூலம் நிர்ப்பந்தம் செய்த காலமுதல் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் மத்திய, மாநில அரசுகளின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் மத்திய, மாநில அரசுகளின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் போராடிவருகிறது (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க.


இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழ் ஈழமே தீர்வு, தமிழீழ விடுதலைப்போரில் ஊன்றி நிற்கும் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம் என்ற நிலையெடுத்து -1983 முதல்- பிரச்சாரம் செய்துவந்த (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க., சிங்கள பேரினவாத இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்தும் பணவுதவி செய்தும் போரில் மறைமுகமாகப் பங்கு கொண்டும் தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றிய இந்திய அரசைக் கண்டித்து பிரச்சார இயக்கம் மேற்கொண்டது.

அத்தோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டை வேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து தமிழீழ மக்களுக்கு துரோகம் செய்ததை அம்பலப்படுத்தி பிரச்சார இயக்கம் மேற்கொண்டது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க). முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னரும், “தமிழீழம் வெல்லும்வரை ஓயமாட்டோம்!”, “ஈழ விடுதலைப் போருக்கு துரோகம் இழைத்த இந்திய ஆளும் கும்பலைக் கருவறுப்போம்” என முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம். (ம.ஜ.இ.க).


ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகத்தை மூடிமறைக்கவும் தமிழினக் காப்பாளன் என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவும் ‘செம்மொழி மாநாடு’ என்கிற பெரும் கூத்தை கோவையில் கருணாநிதியார் அரங்கேற்றியபோது, “பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு! என்றும், அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம் இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியே ஆனாலும் தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது! என்றும், தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும், ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிப்பாட்டு மொழியாய் அன்னைத் தமிழை அரியணை ஏற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்கிற நிலைபாட்டை முன்வைத்து ம.ஜ.இ.க பிரச்சாரம் மேற்கொண்டதை கருணாநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


தன் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் முரணற்ற ஜனநாயக முழக்கங்களை முன்வைத்துப் போராடும் (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க மீது பாசிசத் தாக்குதலை கூர்மைப்படுத்தியது கருணாநிதி அரசு. செம்மொழி மாநாட்டை அம்பலப்படுத்திய (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.) ம.ஜ.இ.க தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. ம.ஜ.இ.க.வின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கிச் சூறையாடியது கருணாநிதி அரசு, மேற்கூறிய அடக்குமுறைகளால் ம.ஜ.இ.க.வின் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தை கருணாநிதி அரசால் தடுக்க முடியவில்லை. மாறாக ம.ஜ.இ.க.வின் அரசியல் பிரச்சாரம் வேகம் பெற்றது.


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிராக ம.ஜ.இ.க “ஒபாமா வெண்புறா அல்ல, பிணம் தின்னிக் கழுகே!”, “மன்மோகன் கும்பலே ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்காதே!” என முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்தின் யுத்ததந்திரக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றவும், மீளமுடியாத நெருக்கடிச் சூழலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க அந்த நெருக்கடிகளின் சுமைகளை இந்திய மக்கள் மீது சுமத்த இந்தியாவுடன் இராணுவ, அணுசக்தி, பொருளாதார, அரசியல் ஒப்பந்தங்களைப் போடவே ஒபாமா இந்தியாவிற்கு வருகிறார். அப்படிப்பட்ட ஒப்பந்தங்களை போட்டு நாட்டைக் காட்டிக் கொடுக்காதே என இந்திய அரசை எதிர்த்தும், பிணம் தின்னிக் கழுகு ஒபாமாவே திரும்பிப் போ! என அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நவம்பர் 8ல் அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்தான், தோழர் ஜீவா நவம்பர் 6ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.


‘பயங்கரவாத ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு’ என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒருபுறம் போலீஸ் பட்டாளத்தைக் குவித்து புரட்சிகர இயக்கங்கள் மீது அடக்குமுறை தொடுப்பதும் மறுபுறம் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களிலும் சில்லரைச் சலுகைகளை வாரி இறைத்து புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கிவிடலாம் என ஆளும் வர்க்கங்களும் மத்திய, மாநில அரசுகளும் பகல்கனவு கண்டுகொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கைது செய்யப்படும் மார்க்சிய லெனினிய (மா.லெ) புரட்சியாளர்களை, நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தவர்கள் என்ற காரணத்தைக் காட்டி பிணை வழங்காமல் வழக்கை இழுத்தடித்து நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பதை ஒரு கொள்கையாகவே இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. இதுவும், புரட்சிகர இயக்கங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலே.
இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் மக்களின் எல்லா வாழ்க்கைத் துறையிலும் செய்துகொண்டிருக்கும் மக்கள் விரோத, தேசவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஓவ்வொரு அடியிலும் எதிர்த்து சமரசம் இன்றிப் போராடும் ம.ஜ.இ.க. வையும் அதன் அரசியல் கருவையும் அழிக்கும் நோக்கத்திலேயே தனிப்படை அமைப்பு, தேடுதல் வேட்டை, தோழர் ஜீவா கைது!


மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பாசிசத் தாக்குதல்களால் புரட்சிகர இயக்கத்தை, புரட்சிகர அரசியலை புதைத்துவிட முடியாது. விதைக்கப்படும் புரட்சிகர அரசியல் கருத்துக்கள் மக்கள் மனங்களில் முளைத்து தழைத்து மக்கள் விரோத, தேசவிரோத ஆட்சியாளர்களையும் ஆளும் வர்க்கங்களையும் முட்டிச் சாய்த்து புதைகுழிக்கு அனுப்பியே தீரும்,

போலி ஜனநாயகம் பொசுங்கியே தீரும், மக்கள் ஜனநாயகம் மலர்ந்தே தீரும்.
எனவே ம.ஜ.இ.க.வின் மீதான அடக்குமுறைகளுக்கெதிரான கண்டன இயக்கத்திற்கு ஆதரவு அளித்தும், தோழர் ஜீவாவின் மீதான வழக்கினை நடத்தவும், அத்தோழரின் குடும்பத்தைப் பராமரிக்கவும் கணிசமாக நிதி தந்து உதவுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

* காலாவதியாகிப்போன வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையான பிறகு, தோழர் ஜீவாவைக் கைது செய்தது ஏன்?

* அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும்போராடும் ம.ஜ.இ.க வின் மீதான தொடர் அடக்குமுறையின் ஒரு பகுதியே தோழர் ஜீவா கைது !

* கருணாநிதி அரசே! புரட்சியாளர்களைக் கைது செய்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை (ம.ஜ.இ.க) நசுக்க முயலாதே!

* தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு நவம்பர் 2010

================================================

Note:
Maoist cadre held

Special Correspondent The Hindu Monday, Nov 08, 2010
CHENNAI: The Q branch CID police on Saturday arrested a top Maoist cadre in Tiruvallur district.
According to police sources, Natham Jeeva, who remained underground for many years, was nabbed near Thiruninravur by a special team following a specific input.
He was allegedly involved in a murder case.
“Jeeva is a very important Maoist cadre who was wanted by the Tamil Nadu police for about 35 years,” Inspector-General of Police (intelligence) M.S. Jaffar Sait said.

http://www.thehindu.com/news/cities/Chennai/article871126.ece

===========================================================

Tuesday 16 November 2010

பிணந்தின்னி கழுகு ஒபாமாவே திரும்பிப்போ!

பிணந்தின்னி கழுகு ஒபாமாவே திரும்பிப்போ!
அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈராக், ஆப்கனை விட்டு வெளியேறு!
* புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலே, ஒபாமாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காதே!
* இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட துரோக ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

* கள்ளத்தனமாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் வெளியிடு!

* பாராளுமன்ற ஒப்புதல் இன்றி ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள அனுமதிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 184 ஐ ரத்துச் செய்!
* அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!
************************
*அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கப் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
************************
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு -
======== சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>