Sunday 25 September 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை - சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!


ரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது தமிழக அரசு. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒழிந்து கொண்ட இருவர் பாம்புகடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குமுன் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருவோரை அச்சுறுத்தும் விதமாக முதுகுளத்தூர் வட்டார பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரை உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர். மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமிழகக் காவல்துறையின் அரசுபயங்கரவாதமும், உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிச நடவடிக்கைகளேயாகும்.

சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படைக்காரணம்:

பரமக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் ஒரு தனித்த போக்கு அல்ல. மாறாக தென் தமிழகத்தின் பலபகுதிகளில் தேவர்சாதி மற்றும் உயர்சாதியினருக்கும், தேவேந்திரகுல வேளாளர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான பூசல்கள் நீறுபூத்த நெருப்பாக எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலவரம் வெடிக்கும் என்ற நிலைமை கடந்த பலமாதங்களாக தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், அதிகாரவர்க்க அரசு இயந்திரமே சாதிவெறியோடு செயல்படுவது போன்ற காரணங்களே சாதிக் கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உள்ளாட்சியிலும் கூட பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள உயர்சாதியைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு, தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தல் போன்ற காரணங்களே சாதியப் பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.

பார்ப்பனிய வெறிகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம், பள்ளப்பச்சேரியைச் சார்ந்த பழனிகுமார் என்ற மாணவன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக சுவற்றில் எழுதியதே  என்று கூறுகிறார். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது மட்டுமல்ல நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே பழிபோடுகிறார். ஆனால் உண்மை வேறாகும்.

பள்ளப்பச்சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் விருதுநகருக்கோ, கமுதிக்கோ செல்ல வேண்டுமானால் மண்டலமாணிக்கம் ஊர் வழியாகத்தான் போகவேண்டும் பள்ளப்பச் சேரியிலிருந்து மண்டலமாணிக்கத்திற்குள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாதையை அமைக்க  உயர்சாதி ஆதிக்க சக்திகள் கடந்த 30 ஆண்டுகளாக அனுமதி மறுக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின்  ஆட்சி மாறி மாறி வந்தபோதும் பள்ளப்பச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோயினர். அதிகார வர்க்கத்திடமும், மாவட்ட ஆட்சியினரிடமும் மனுக்கொடுத்தும் அம்மக்களின் துயரம் நீக்கப்படவில்லை. அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயர்சாதி ஆதிக்கத்தின் இழிவுக்குள்ளாக்கப்படாத நாட்களே இல்லை.

இத்தகைய நிலைமைகளில்தான் பழனிகுமார் தேவரைப் பற்றி தவறாக எழுதினான் என்று கொல்லப்படுகிறான். அவன் எழுதினானா என்பது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அவன் எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வது நியாயமானதுதானா? அதைத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நியாயப்படுத்தலாமா? இது உயர்சாதி ஆதிக்க சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோவது அல்லாமல் வேறு என்ன? தங்கநாற்கர சாலை அமைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்காதது ஒரு மாபெரும் குற்றமே. குற்றவாளிகளாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளி என்பது ஒரு வன்கொடுமையேயாகும்.

தமிழக காவல்துறையின் சாதிவெறி

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கு தமிழக காவல்துறை தொடர்ந்து உதவிசெய்தே வந்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையே சாதிவெறிக்கு உள்ளாகி உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியனை, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதித்தால் அவர் பழனிகுமாருக்கு அஞ்சலி செலுத்த செல்வார். அவ்வாறு சென்றால் அது பெரும் கலவரமாக மாறும். எனவேதான் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது என்று காவல்துறையின் கட்டுக்கதையை ஜெயலலிதா வழிமொழிகிறார்.

அப்படியே வன்முறை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டுமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் தலைவர்களையும் கைது செய்வது எப்படி நியாயமாகும். எனவே வன்முறையைக் காரணம் காட்டி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் கலந்து கொள்வதை தடை செய்வதற்கோ, பழனிகுமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதையே தேவர் பூஜையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் காரணம்காட்டி ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு தடைவிதித்து அவர்களை காவல்துறை கைது செய்திருக்குமா.

ஜான்பாண்டியனின் கைதைக் கண்டித்து சுமார் 500 பேர்தான் மறியல் செய்ததாக காவல்துறையே கூறுகிறது. பல்லாயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வெறும் 500 பேரைக் கலைப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதேன்? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் இரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்துவது, வானை நோக்கி சுட்டு மக்களை எச்சரிப்பது அதற்கும் கலையவில்லை எனில் முட்டிக்கும் கீழே சுடவேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறை கடைபிடிக்காதது ஏன்? எடுத்த உடனேயே தலையைக் குறிவைத்து தாழ்த்தப்பட்ட மக்களை காக்கை குருவிப்போல் சுட்டுத்தள்ளியது காவல்துறையின் உயர்சாதி வெறியைத்தானே நிரூபித்துள்ளது.

மேலும் சென்னை மாநகரத்திலும், தமிழக அரசின் முக்கிய பதவிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. பிற உயர்சாதி அதிகாரிகளும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவீதம் பேர் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாது. இவ்வாறு தமிழகக் காவல்துறை மெல்ல, மெல்ல உயர்சாதி ஆதிக்க சக்திகளாலேயே தலைமை தாங்கப்பட்டு சாதிவெறிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் பரமக்குடி சம்பவம்.

உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் முதலாளித்துவ அரசியல்கட்சிகள்

உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. தமிழகத் தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு முக்குலத்தோர் சாதி வெறிக்கு சேவை செய்கின்றன. ஜெயலலிதா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும், உயர்சாதி ஆதிக்க வெறியையும் சட்டசபையில் ஆதரித்துப் பேசுகிறார். கருணாநிதியோ காவல்துறைக்கு `துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்`, என ஆலோசனை வழங்குகிறார். உயர்சாதி ஆதிக்க சக்திகளையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கவில்லை. கிராமப்புற பெரும்பான்மை மக்களாக உள்ள முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல. அக்கட்சிகளில் உள்ள கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க வர்க்கங்கள் கட்சி வித்தியாசம் பாராமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கூட்டு சேர்ந்து கொள்ளுகிறது. அண்மையில் குஜராத் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா அதிமுக பிரதி நிதிகளை அனுப்பி வாழ்த்துச் சொல்லுகிறார். கருணாநிதியோ மோடியை ஆதரித்து அறிக்கை விடுகிறார். இவ்வாறு இவ்விருக் கட்சிகளும் இந்து மதவெறி பாசிசத்திற்கும், உயர் சாதி வெறிப் பாசிசத்திற்கும் சேவை செய்யும் பிற்போக்குக் கட்சிகளாக மாறி விட்டதன் விளைவுதான் தென் மாவட்ட சாதிக்கலவரங்கள்.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின்போதுதான் கள்ளர், மறவர், தேவர் என்ற சாதிகளை ஒன்றிணைத்து முக்குலத்தோர் எனப்பட்டம் சூட்டப்பட்டது. முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செலவிலேயே சென்னையில் சிலைவைத்தனர். 1991லும், 2001லும் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தேவர் இன மக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. தேவர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பெருபங்கு வகித்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், உயர்சாதி ஆதிக்க வெறியர்களும், அதிகார வர்க்கத்தில் உள்ள முக்குலத்தோரைச் சார்ந்த அதிகாரிகளும் உத்வேகம் அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர். இவ்வாட்சியை தங்களது ஆட்சியாகவே கருதுகின்றனர்.

தன்னை சமூக நீதிக் காவலன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்றும், சமத்துவமே தமது மூச்சு என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியின்போதுதான் முத்துராமலிங்கத் தேவரின் 100ஆம் ஆண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்பட்டது. 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்போடு அரசு இயந்திரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி படு விமரிசையாக இவ்விழா நடத்தப்பட்டது. தேவர் சாதி ஆதிக்க சக்திகளும், அரசும் கூட்டுசேர்ந்து நடத்தினர். ஜெயலலிதா அதற்கிணையாக மதுரையில் தேவருக்கு 100 அடி உயர சிலை வைக்கவும், ‘இரண்டாம் படைவீடுஎன்ற பேரில் தேவருக்குச் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், தன்பங்கிற்கு காணிக்கை செலுத்தினார்.

அதே நேரத்தில் அன்று பா.ம.கவில் இருந்த ஜான்பாண்டியன் அவர்கள், இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்ததற்காக, துப்பாக்கி சூடு நடத்தி 4 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றது, அன்றைய கருணாநிதி ஆட்சி. அத்துடன் 1999-ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் 17 தாழ்த்தப்பட்ட மக்களை கருணாநிதி ஆட்சி சுட்டுக் கொன்றதையும் மக்களால் மறக்க முடியாது.

பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது பண்ணையடிமை முறையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கத்தினரும், ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. தேவர் பெயர் சூட்டுவதும், மணிமண்டபம் கட்டுவதும், பொதுப்பெயர் சூட்டி ஒரு குறிப்பிட்ட சாதியை வலிமைப் படுத்துவதில் அதிமுக, திமுகவின் போக்கிற்கு எதிராகவே தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். தங்கள் தலைவன் இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்குக் காரணமான முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக, தங்கள் தலைவனுக்கு சிலை வைக்கவும், விழாக் கொண்டாடவும் தொடங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு விழாக் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நிலைமைகளே காரணமாகும். ஆனால் உயர்ந்தசாதி ஆதிக்க சக்திகளுக்கு இது கோபத்தை உருவாக்குகிறது. இனி தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி விழா எடுப்பதையும், அவர்கள் அமைப்பாக அணிதிரள்வதையும் தடுக்கும் பொருட்டுத்தான் இன்று காவல்துறை ஊர் ஊராக தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை பொய்வழக்கில் கைது செய்துவருகிறது. காவல் படையைக் குவித்து அம்மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் துப்பாக்கிச் சூட்டை பெயரளவில் கண்டிக்கின்றன. உண்மையில் உயர் சாதி ஆதிக்கத்திற்கு துணை போகின்றன. தான் மட்டும்தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று கூறிக்கொண்ட விஜயகாந்த் கட்சி  இந்த காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக விசாரணை கமிசனே தேவையில்லை என்று சட்டசபையிலேயே வாதிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்து, திடீர் விபத்தால் எதிர்க்கட்சியாகிவிட்ட அந்தக் கட்சிக்கு எத்தனை சாதிவெறி பாருங்கள்?

எனவே, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதோடு காவல்படையினரையும் திரும்பப் பெறக் கோரியும்; காவல்துறையில் மலிந்துவரும் உயர்சாதிவெறியைப் போக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் கோரியும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5லட்சமும். காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சமும் நட்ட ஈடு கோரியும்; கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும்; துப்பாக்கிச் சூட்டிற்கும்; தடியடிக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1999, 1995 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனப் போராடுவது உடனடிப்பணியாக அமைந்துள்ளது.
அதேசமயம், சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் முடிவுகட்ட நிலப்பிரபுத்துவ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை, வழிபாட்டு உரிமை போன்ற சம உரிமைக்காக அனைத்து சாதிகளிலுமுள்ள  உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதற்கு தயாராக வேண்டும். உயர்சாதி ஆதிக்க வெறியர்களையும், உயர் சாதி வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கும், சாதிக்கலவரங்களை முற்றாக ஒழிப்பதற்கும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்.


பழனிக்குமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிசமே!

* பார்ப்பனிய ஜெயாவே! உயர்சாதி ஆதிக்கவெறிப்பிடித்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பரிந்துபேசாதே!

* துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெறு! தேடுதல்வேட்டையை நிறுத்து! காவல் படையைத் திரும்பப்பெறு!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளுமே சாதிப் பூசல்களுக்கும், மோதல்களுக்கும் காரணம்!

* பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, சமத்துவம் பேசிக்கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!

தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், ஜனநாயக சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளஞர் கழகம் - தமிழ்நாடு                     செப்டெம்பர் 2011


Tuesday 13 September 2011

தியாகிகள் தினப் பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக சிறப்புப் பேச்சாளர் தோழர் மனோகரன் உரை






இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

தியாகிகள் தினப்பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் உரை



இப்பதிவில் இணைந்துகொண்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

Sunday 4 September 2011

செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!


செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!  ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

சோனியா, மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரித்துவிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு என நாளும் குறிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்தது. காஞ்சியில் ’செங்கொடி` என்ற இளம் பெண் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். தமிழகம் கொந்தளித்தது. இவர்களின் தூக்குத்தண்டனைக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று 8 வார காலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்துள்ளது.

ஆனால் சோனியா, மன்மோகன் கும்பலோ பேரறிவாளன் உள்ளிட்ட இம்மூவரின் கருணை மனுக்களை கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது அவசர அவசரமாகவும் சட்ட விரோதமாகவும்

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்தக் கும்பல் துடிப்பது ஏன்?

கருணை மனுவிற்கு இரண்டு ஆண்டிற்குள் குடியரசுத் தலைவர் பதிலளிக்காவிட்டால் மரணத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாக மாறிவிடும்.

மேலும் ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதிகளையும், சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் மீதான குற்றச்சாட்டு மர்மங்களையும் தீர்க்காமலே, விசாரணை முடியாமலே சட்ட விரோதமாக இம்மூவரையும் அவசர கதியில் தூக்கிலிடுவதற்கு சோனியா மன்மோகன் கும்பல் கொலைவெறியோடு துடிப்பது ஏன்?

ஈழத்தமிழின அழிப்புப் போரின் தொடர்ச்சியே இம்மூவரின் தூக்கு:

சிங்கள இனவெறிப் பாசிச ராஜபட்சே கும்பல் ஈழத்திற்கு எதிரான நான்காம் கட்டப்போர் எனும் பேரில் ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது. இப்போரில் ஈழத்தழிர்கள் 1 லட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ராஜபட்சே கும்பல் இப்போரை நடத்தியது. ராஜபட்சே கும்பல் இப்போரில் கடும் போர்க் குற்றங்களை புரிந்தது. இந்திய அரசு இப்போரை ராஜபட்சே கும்பலுடன் கூட்டாகவே நடத்தியது.
போருக்குப் பின்பும் இராஜபட்சே கும்பல் ஈழப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகளை மறுத்து இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. எனவே உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ராஜபட்சே கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்தும், இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடினர். ஐ.நா பொதுச் செயலாளர் நிபுணர்குழுவை அமைத்தார். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மையே என்று இக்குழுவும் கூறியது. சேனல் 4 போர்க்குற்றக் காட்சிகளை ஒளிபரப்பியது. அது உலகத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. சர்வதேச அரங்குகளில் இராபட்சே கும்பல் மீது கண்டனம் குவிந்தது. தமிழகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் இராஜபட்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.


இந்திய அரசு இராஜபட்சே கும்பலை சர்வதேச அரங்குகளில் பாதுகாத்துவருகிறது.

தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கை அரசுடன் கூடிக்குலாவுகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியது. எனவே இத்தகைய சூழலில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும், ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் இம்மூவரின் தூக்குத் தண்டனையை அவசரமாக செயல்படுத்த துடிக்கிறது. இந்தத் தூக்கு ஈழத்தமிழின அழிப்புப்போரின் தொடர்ச்சியேயாகும்.

இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கைக்கு கொடுத்த விலைதான் ராஜீவ் படுகொலை

அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதுடன் இந்தியத் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும் திகழ்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சட்டவிரோதமாக்கியுள்ளது. காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் மக்களின் தேசிய இனப் போராட்டங்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய அரசு, இந்திய ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களிலிருந்து தென் ஆசியாவில் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கிறது. தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து அண்டை நாடுகளின் மீது தமது மேலாதிக்கத்தைத் திணிக்கிறது. இலங்கையில் நடக்கும் இனப்பூசலை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்விவகாரங்களில் தலையிட்டது. இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வருகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கை அரசை பணிய வைப்பதற்காக ஈழப்போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கை அரசுடன் மோதவிட்டது. ராஜீவ் காலத்தில் இலங்கை அரசு பணிந்தவுடன் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு ஈழவிடுதலைப் போருக்குத் துரோகம் செய்தது. ஈழப் போராளிகள் அமைப்புகளை பணியவைத்தது. புலிகள் அமைப்பு மட்டும் பணிய மறுத்தது.

1987ல் ராஜீவ் மேற்கண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்று கூறி ‘அமைதிப்படை’ எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை அனுப்பிவைத்தார். அந்தப்படை ஈழத்தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேட்டையாடியது. பல்லாயிரம் பேர் இப்போரில் இந்தியப் படையால் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அந்தப்படை ஈழமக்களை சூறையாடியது. இந்திய ‘அமைதிப்படையால்’ பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த அநீதிப் படையின் தலைவன் என்ற முறையில் ராஜீவ் காந்தியை தற்கொலைப் படையாய்மாறி கொன்றாள். எனவே ராஜீவ் படுகொலை கிரிமினல் நடவடிக்கை அல்ல. அது ஒரு அரசியல் படுகொலையே.

இதற்குத் தீர்வு இம்மூவரையும் தூக்கில் ஏற்றுவதல்ல. மாறாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும், ஈழமக்களுக்கு இந்திய அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதுமே தீர்வாகும்.

இந்திராகாந்தியை கொன்றவனை தூக்கிலிட்டதால், ராஜீவ் காந்தியை காக்க முடியவில்லை. எனவேதான் இம்மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

போலி மோதலும் மரணதண்டனையே!

இந்திய அரசு மரணதண்டனையை அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துவதாகக் கூறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனை அத்தகையதுதான் என்று கூறுகிறது. ஆனால் இந்தியா முழுதும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களையும், மாவோயிஸ்டுகள் போன்ற புரட்சியாளர்களையும் போலீசுடன் மோதல் எனும் பேரில் சுட்டுத்தள்ளுகிறது. வழக்குகளின்றி, விசாரணை இன்றி பல்லாயிரக்கணக்கான பேர் இவ்வாறு இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் அனைத்து மோதல் படுகொலைகளும் சட்டவிரோதமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமாகும்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாகாணங்களிலும் நடப்பில் உள்ள `ஆயுதப்படை சிறப்புச் சட்டங்கள்` இராணுவத்தினருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குகின்றன. அவர்கள் நினைத்தால் எவரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம். நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கமுடியாது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களின் தூக்குதண்டனையை இரத்து செய்யச் சொல்வது எந்த அளவிற்கு நியாயமானதோ, அதே அளவிற்கு போலி மோதல் மூலம் அன்றாடம் இராணுவமும், காவல்துறையினரும் செய்யும் கொலைகளை தடுத்து நிறுத்தப் போராடுவதும் சிறப்பு இராணுவச் சட்டங்களை ரத்துச் செய்யப் போராடுவதும் அவசியமாகும்.

பறிபோகும் மாநில அதிகாரங்கள்

ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பிரச்சினை தொடர்பாக கருணை மனுவை மாநில ஆளுனர் பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசு கோர முடியாது என 1991ஆம் ஆண்டு மத்திய அரசு 161 சட்டப்பிரிவிற்கு தெளிவுரை எழுதியுள்ளது என்று கூறியுள்ளார். எனினும் சட்டமன்றத் தீர்மானம் மூலம் குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசு இலங்கை அரசுடன் கூடிக் குலாவுவதை கண்டிக்கவில்லை. ஜெயலலிதா அரசாங்கம் இலங்கைப் பிரச்சனையிலும் மூவரின் தூக்கு தண்டனைக் குறித்த பிரச்சனையிலும் கொண்டுவந்துள்ள சட்டமன்றத் தீர்மானங்கள் வரவேற்கத் தகுந்ததே. எனினும் இவையெல்லாம் தீர்மானங்களாகவே இருந்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க போன்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமையை ஏற்காத கட்சிகள், மாநில உரிமை, சுயாட்சி பேசும் கட்சிகளே. தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு இலங்கை அரசோடு கூடிக் குலாவுவதை ஜெயலலிதா கண்டிக்கவில்லை. மாநில சுயாட்சி பேசிய கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சி பற்றியே கவலைப்படுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தூக்குதண்டனையை இரத்து செய்வது பற்றியும் மத்திய அரசிற்கும் கடிதம் எழுதுவதோடு சரி. ஆனால் கனிமொழியை விடுவிப்பதற்கு, சொத்து அபகரிப்பு வழக்குகளிலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே துடிக்கிறார். எனவே இவ்விருக் கட்சிகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூட காப்பாற்றுமா என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சினையாக இருப்பினும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினையாயினும் நதிநீர் பிரச்சினையாக இருந்தாலும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்ற சோனியா குமபலின் மத்திய அரசு மறுக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறது. தமிழினத்தின் மீது பகைமையை கக்குகிறது.

இந்தியாவில் ஏற்படும் இத்தகைய தேசிய இனச்சிக்கல்களுக்கு அனைத்து தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து இந்திய அரசை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்று கருதுகிறோம். அதுவே இத்தகைய போராட்டங்களுக்கு பலமளிக்கும் என்றும் கருதுகிறோம்.


எனவேதான் இவ்வாண்டு தியாகிகள் நினைவுநாளில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குதண்டனையை இரத்துச் செய்யவும், தமிழினத்துரோகி சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியை தூக்கியெறியவும் தமிழ்மக்கள் அனைவரும் ஓரணியில் திரள அறைகூவி அழைக்கிறோம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யப் போராடுவோம்!
*  மூவரையும் தூக்கிலிடத் துடிக்கும் தமிழினத்துரோகி சோனியா, மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்


குறிப்பு:  அழுத்தம் எமது

Thursday 1 September 2011

ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!



*  புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுக்கும் விலையே ஊழல்!

*  ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!  ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

*  நிதிமூலதனத்திற்கும், தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்!

*  ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!

*  கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்!

*  ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே!

*  ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!

*  ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

======= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ========= 02-09-2011