Saturday 26 January 2013

அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கமும் ``அரபு வசந்தமும்``

 
 
அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கமும்
 `` அரபு வசந்தமும் ``
 
சர்வதேச ஆய்வு நிறுவன  மூல நூலின் தமிழாக்கம்
 
வெளியீடு சமரன் வெளியீட்டகம்
 
 
முன்னுரை
               
அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.

எண்ணெய்க்கான  போட்டி

 வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகள் 41.464 பில்லியன் பீப்பாய்கள் ஆகும். இது உலகின் மொத்த இருப்பில் 3.34 சதவீதம் ஆகும். அது அமெரிக்காவைவிட இருமடங்கு அதிகமாகும். சவுதி அரேபியாவில் உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் 25 சதவீதமும், ஈராக்கில் 11 சதவீதமும், ஈரானில் 10 சதவீதமும் உள்ளன. அத்துடன் நைஜீரியா, அல்ஜீரியா, சூடான், எகிப்து, ஏமன், கத்தார், இந்தோனேசியா, மலேசியா, புருனே உட்பட அனைத்து முஸ்லீம் நாடுகளில் உள்ளதையும் சேர்த்தால் உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 66லிருந்து 76 சதவீதம் வரை இந்நாடுகளில் கொட்டிக்கிடக்கிறது. இந்த மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்காவின் பகாசுர எண்ணெய் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாகும்.

 ஏகாதிபத்தியம் பற்றி லெனின் (ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூலில் - ப-ர் ) கூறும்போது மூலவளங்களைக் கைப்பற்றுவதற்கு காலனியாதிக்கம்தான் உகந்தது என்று பின்வருமாறு கூறுகிறார்:

  “முதலாளித்துவத்தின் நவீனக்கட்டத்தினுடைய தலையாய அம்சம், மிகப்பெரிய தொழிலதிபர்களது ஏகபோகக் கூட்டுகளின் ஆதிக்கமாகும். மூலப்பொருட்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் ஒரு கூட்டினால் கைப்பற்றப்பட்டுவிடும்போது இந்த ஏகபோகங்கள் உறுதியாக நிலைப்பெற்று விடுகின்றன. போட்டியிடுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் எதிராளிகளிடமிருந்து பறிப்பதற்காக, உதாரணமாக இரும்புக் கனிம பிரதேசங்கள், எண்ணெய் வளங்கள் முதலியவற்றை வாங்கிக்கொண்டு விடுவதற்காக சர்வதேச முதலாளித்துவக் கூட்டுக்கள் எப்படி ஆவசேமாகப் போராடுகின்றன என்பதைப் பார்த்தோம்.

                போட்டியாளர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் எழக் கூடிய எல்லா சந்தர்ப்பங்களிலும், அரசு ஏகபோகம் ஒன்றை ஏற்படுத்தும் சட்டத்தின் மூலமாக எதிராளி தன்னை பாதுகாத்துக் கொள்ளவிரும்பும் சந்தர்ப்பம் அடங்கலாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏகபோகத்துக்கு முழு உத்திரவாதம் அளிக்கக் கூடியது காலனிய உடைமைகள் மட்டுமேதான்.

                முதலாளித்துவ வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, மூலப்பொருட்களின் பற்றாக்குறை எவ்வளவுக் கெவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப்பொருள் ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிக உக்கிரமடைகின்றனவோ காலனிகளை பெறுவதற்கான போராட்டமும் அவ்வளவுக்கவ்வளவு மூர்க்கத்தனமாகிவிடுகிறது.”

                அன்று லெனின் கூறியது இன்றும் மிகப்பொருத்தமாக உள்ளது. இன்று உலகம் முழுவதும் மிக அத்யாவசியமாக தேவைப் படும், அரிதான மூலப்பொருளான எண்ணெய், எரிவாயுவை மலிவான விலையில் தன் வசப்படுத்தவும், போட்டியாளர்களை விரட்டியடிக்கவும், எண்ணெய் வளநாடுகளில் அதன் பெயரளவிலான இறையாண்மையையும் அழிக்கவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொம்மை ஆட்சிகளை கொடிய ஆக்கிரமிப்புப் போர்கள் மூலம் நிறுவிவருகிறது.

புதிய காலனிய மறுபங்கீடு

                பொதுவாக, ஆப்பிரிக்க எல்லை வரைபடத்தை மாற்றி யமைப்பதுதான் அமெரிக்காவின் குறி இலக்கு ஆகும். 1884இல் பெர்லின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லை வரையறைகளை கிழித்தெறிந்துவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரிட்டன் துணையோடு அமெரிக்க - நேட்டோ இராணுவ நடவடிக்கைகள் மூலம், “புதிய காலனிய மறுபங்கீட்டின்” படி ஆப்பிரிக்காவைக் கைப்பற்றுவதேயாகும். 1884 மாநாட்டில் அமெரிக்கா ஒரு முனைப்பற்ற பங்கை வகித்தது. இந்தப் புதிய நூற்றாண்டில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஆதார கனிம வளங்களான கோபால்ட், யுரேனியம், குரோமியம், மாங்கனீசு மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீது ஆங்கிலோ - அமெரிக்க பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை பெருமளவில் நிறுவுவதற்காகத்தான் ஆப்பிரிக்கா மறுபங்கீடு செய்யப்படுகிறது.

                ‘ஆப்பிரிக்காவை புதிய மறுபங்கீடு’ செய்வது என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் முன்னாள் காலானித்துவ சக்திகளான பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் பாத்திரத்தை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தை பலவீனப்படுத்தி தூக்கியெறிவதுதான், அமெரிக்காவின் பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.

                பொதுவாக வட ஆப்பிரிக்காவிலும், மத்தியக் கிழக்கிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. லிபியாவின் 11 சதவீத எண்ணெய் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பிரதேசங்களில் சீனாவின் இருப்பை ஊடுறுவலாகவே  வாஷிங்டன் கருதுகிறது. புவிசார் அரசியலின் அடிப்படையில் இது சீனாவின் அத்துமீறலாகும். லிபியாவில் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த ஆக்கிரமிப்பு என்பது வட ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவை வெளியேற்றுவதற்கான உள்நோக்கம் கொண்டதேயாகும்.

                ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவின் எண்ணெய்யை பெரிதும் சார்ந்துள்ளது. 85 சதவீதம் எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லிபியாவை அமெரிக்கா கைப்பற்றியதானது பெரும்பாலும் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை பெரிதும் பாதிக்கும். 30 சதவீதம் எண்ணெய் யையும், 10 சதவீதம் எரிவாயுவையும் இத்தாலி லிபியாவிடமிருந்து பெற்றுவந்தது.

                ஈராக், எகிப்து, லிபியா தற்போது சிரியா என வரிசையாக நாடுகளைக் கைப்பற்றி இறுதியாக ஈரானை சுற்றி வளைத்துத் தாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும். அது ஈரானைக் கைபற்றும்போது இப்பிராந்தியத்தில் இரசியா மற்றும் சீனாவின் செல்வாக்கை முற்றாக ஒழிப்பதுடன் அது ஒரு கடும் நெருக்கடியை உருவாக்கும். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட நாடுகளின்மீது புதிய காலனியத்துவத்தை திணிப்பதுடன் உலகை மறுபங்கீடு செய்வதற்காக - தமது உலக மேலாதிக்கத்திற்காக உக்கிரமாக போராடி வருகிறது.

            “அமெரிக்காவின் பாதுகாப்பு மறுக்கட்டமைப்பு” என்ற தலைப்பிட்ட, “புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்” (Programme for New American Century - PNAC) 2010-ஆம் ஆண்டறிக்கை ஒரு நீண்ட யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அது நாடுகளை விழுங்குவதற்கான ஒரு யுத்தமாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான இராணுவத்திட்டம் என்னவென்றால், “ஒரே நேரத்தில் பல பிரதேசங்களில் போரிடுவதுடன் தீர்மானகரமான பல வெற்றிகளை குவிப்பதுமாகும்.” ஈராக், ஆப்கன், சிரியா, லிபியா என அமெரிக்காவின் பல அரங்கு போர்கள் தொடர்கின்றன. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனிய மறுபங்கீட்டுக்கான போர் தொடர்கிறது.

அமெரிக்காவின் போரும் தொண்டு நிறுவனங்களின் சேவையும்

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேற்கண்ட குறிக்கோள் களை அடைவதற்கு நான்கு வகையான செயல்தந்திரங்களை கடைப்பிடிக்கிறது.

முதலாவதாக ,

தமக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளை போக்கிரி அரசுகள் என்றும், பயங்கரவாத நாடுகள் என்றும் அறிவித்து அந்நாடுகள் மீது நேரடி இராணுவ நடவடிக்கைகளை எடுத்து, ஆகிரமிப்புப் போர்கள் நடத்தி, ஆட்சி மாற்றத்தின்மூலம் தனது பொம்மை ஆட்சியை உருவாக்கி வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பேரால் ஆப்கன், ஈராக்கிலும் பிறகு தற்போது ஈரான் மீதும் ஒரு போருக்கு அமெரிக்கா தயார் செய்து கொண்டிருக்கிறது.
             
இரண்டாவதாக,

தமது அடிவருடி அரசுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளைக் கொண்டு ஒரு பிற்போக்கு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளை மிரட்டிப் பணியவைக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பிற்போக்கு பாசிச கும்பலின் கூட்டணியே இந்தக் கூட்டணியாகும். இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து ஆக்ரமிப்பு செய்வதை அமெரிக்கா ஆதரிப்பதன் இரகசியமும் இதுதான்.
அடுத்து ஷியா, சன்னி மதப் பிரிவினர்களுக்கிடையில் மத மோதல்களை உருவாக்குவதன் மூலம் மக்களை மத ரீதியாக மோதவிடுகிறது. ஈராக், குவைத், குர்திஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இத்தகைய மதக்கலவரங்களால் மக்கள் அன்றாடம் கொல்லப்பட்டுவருகின்றனர். வடக்கு ஆப்பிரிக்காவில் இனக் குழுக்களிடையே பிரதேச ரீதியான மோதல்களைத் தூண்டி பிளவுப்படுத்துகிறது. தெற்கு சூடானுக்கும் வடக்கு சூடானுக்குமான மோதலில் இலட்சக் கணக்கானோர் கொன்றொழிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் மத மற்றும் பிரதேச மோதல்களை தூண்டிவிடுவதன் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்தப் போராட்டங்களை திசைதிருப்புகிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது.
                ’
மூன்றாவதாக,

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான சிறப்பு உறவைத் தொடர்ந்து கொண்டே - நேட்டோ அமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தமது புதியகாலனிய மற்றும் மேலாதிக்கத்திற்கான போரை அமெரிக்கா நடத்திவருகிறது. ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக, பெயரளவிலான சுதந்திர அரசுகளின் இறையாண்மையைப் பறித்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் மூலம் பன்னாட்டுப் படை எனும் பேரில் தாம் நடத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது. எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளும் கடும் பாதிப்புகளை சந்திப்பதால் முரண்பாடுகள் முற்றிவருகின்றன.
             
 நான்காவதாக,

அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிரி நாடுகள் மீது மட்டுமல்ல, தமது விசுவாசிகளால் ஆளப்பட்டு வருகிற நாடுகளிலும் உள்நாட்டுக் கலகங்களை தூண்டி ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திவருகிறது. அதற்கு அரசுசாரா அமைப்புகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மத்திய கிழக்கில் துனிசியா, எகிப்து, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் நடந்த “அரபு வசந்தம்” என்று அழைக்கப்பட்ட கலகங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டதுதான்.

ஈரானுக்கு எதிராக போராடுவதற்கும், டாலர் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் மறுத்தக் காரணத்தால்தான் லிபியாவின் கடாபி ஆட்சியும், எகிப்தின் முபாரக் ஆட்சியும் தூக்கியெறியப்பட்டது. இந்தக் கிளர்ச்சிகள் அனைத்தும் அரசுசாரா அமைப்புகளால் அமெரிக்க உதவியுடன்தான் நடத்தி முடிக்கப்பட்டது.
           
இந்தக் கிளர்ச்சிகளில் பங்குகொண்ட ஏப்ரல் இயக்கம், முசுலீம் சகோதரத்துவம், மனித உரிமைகளுக்கான பஹ்ரைன் மையம் மற்றும் ஏமன் நாட்டைச் சார்ந்த இளைஞர் அமைப்பின் தலைவரும், மனித உரிமை கண்காணிப்பாளருமான எண்ட்சர் காடி உள்ளிட்ட பெரும் எண்ணிகையிலான “ஆர்வலர்களும்” குழுக்களும், அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி, இராணுவ பயிற்சி மற்றும் ஆயுத உதவி பெற்றே செயல்பட்டனர். வாஷிங்டனைச் சார்ந்த சர்வதேச குடியரசு நிறுவனம் (IRI), (NED) தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) மற்றும் மனித உரிமை அமைப்பான சுதந்திர சபைபோன்ற ஏகாதிபத்திய அமைப்புகள், முன்னர் கூறிய அமைப்புகளை நேரடியாக வழிநடத்தின. அதற்கு அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் தலைமை தாங்கியது.
           
அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள், அமைதிப் பிரதேசங்களில் விரிவடைந்து செல்வதற்காக (சிவில் சமூகம் என்றழைக்கப்படுகின்ற) “அமைப்பு நிர்வாகிகள்” என்ற படையை கட்டியமைக்கின்றனர். அதே நேரத்தில் போர்ப் பிரதேசங்களில் அமெரிக்காவின் சர்வதேச இராணுவத்தை நிறுத்துவது என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதை தாமஸ் பெர்னன்ட் விவரிக்கிறார். அமெரிக்க நிதி அதிபரான ஜார்ஜ் சோரோசின் “ரெவின்யூ வாட்ச்”, ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளையுடன் இணைந்து அரசுசாரா அமைப்புகளின், (NGOs) படையை உருவாக்கியுள்ளது. எப்படிப் போர்வீரர்கள் கூரறிவுத் திறன் இன்றி ஏகாதிபத்தியத்தை பலப்படுத்துகிறார்களோ அதேபோல இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) தாங்கள்தான் உண்மையில் மனித உரிமைக்கு குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு வால்ஸ்டிரீட் மற்றும் இலண்டனைச் சார்ந்த உலகளாவிய நிதி மூலதனத் திமிங்கலங்களின் இலாப வெறிக்காக சேவை செய்கின்றனர்.

 ஒரு பிரிவு தனக்கென்று இலக்கிடப்பட்ட நாடுகளின் முக்கிய இடங்களை வான்வழித் தாக்குதல், திட்டமிட்ட சிறப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகியவற்றை செயல்படுத்தும். இதற்கு இராணுவத்தின் சிறப்பு சாதனங்களான கவச வண்டிகள், போர் விமானங்கள், குண்டுவீசும் கொடிய ரக விமானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்.

 மற்றொரு பிரிவான “அமைப்பு நிர்வாகிகள்”, (NGOs) போர்களினால் அழிவுக்குள்ளான சாம்பல்களிலிருந்து அல்லது அன்னியர்களால் ஆதரிக்கப்பட்டு தூண்டிவிடப்படும் சீர்குலைவு மற்றும் குழப்ப நிலையிலிருந்து தங்கள் வேலையைக் கட்டியமைக்கத் தொடங்குவர். இந்த ‘அமைப்பு நிர்வாகிகள்’, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சர்வதேசிய அமைப்புகள், ஒப்பந்தக்காரர்கள், மற்றும் மக்கள் தொடர்ப்பு அதிகாரிகள் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். தேவைப்பட்டால் இவர்களுக்கு உதவியாக கடற்படையினரும் இணைந்து கொள்வார்கள்.
               
இன்று அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் ரசியா போன்ற எழுபது நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடடுள்ளன.

 தற்போது அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசிற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பிரிட்டனின் பேரரசுகால தொண்டு நிறுவனங்களின் செயல்பட்டதோடு ஒத்துபோகிறது. தற்போது அமெரிக்க ஐக்கிய குடியரசின் தென்பகுதியில் உள்ள ஜார்ஜியா அன்று காலனியாக்கப்பட்டது. உண்மையில் இன்றைய அரசுசாரா அமைப்புகளின் முன்மாதிரியான ஒரு அமைப்பினால்தான்! சிறைக்கூடங்களை சீரமைப்பது என்ற பேரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அது உண்மையில் செய்தது என்னவென்றால் முடியாட்சியின் தேவைகளை நிறைவு செய்வதற்கான தகுதியான குற்றவாளிகளை சிறைகளிலிருந்து தெரிவு செய்ததுதான். அவர்கள் ஜார்ஜியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அந்நாட்டை அடிமைப்படுத்தினர். Dr.பிரேயின் தலைமையிலான “ஜார்ஜிய அறங்காவலர்” என்ற பெயரில் அந்நாட்டு மக்களை துன்புறுத்தி அந்நாட்டு செல்வங்களை பிரிட்டனின் மேட்டுக் குடியினரின் நலன்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற கிரிமினல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போதும், அதற்குப் பின்பும் இந்தியாவிற்குள்ளும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
               
மேலும் பிரிட்டனின் புரோட்டஸ்டண்ட் மதம் நவீன அரசுசாரா அமைப்புகளின் முன்னோடியாகும். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மதப் பிரிவுகள் நேரடியாக அரசியல் வழிகளின் அடிப்படையில் பிளவுண்டன. எனவே கப்பல் கப்பலாக பிராட்டஸ்டண்ட் மதப் பிரிவினர் ஜார்ஜியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவர்களைத் தொடர்ந்து அவர்களின் அரசியல் தொடர்புகளும் பின் தொடர்ந்தன.

இந்த அரசியல் செயல்பாட்டாளர்களின் விசுவாசிகளான பலருக்கு “உயரிய நோக்கங்கள்தான்” அன்றும் இன்றும் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் எல்லா பேரரசுவாதிகளின் தேவாலாயங்களதும் இறுதி நோக்கம், கீழ்தட்டு மக்களின் வலைப்பின்னலால் ஆன அமைப்பை உருவாக்குவதுதான். இந்த மக்கள் தாங்கள் “புனிதமான” உயரிய நோக்கங்களை நிறைவேற்றி வருவதாக நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பேரரசு நாடுகளைச் சார்ந்த மேல்தட்டு சீமான்களுக்காகத்தான் சேவை செய்துவருகின்றனர்.
               
இன்றைய அரசுசாரா அமைப்புகளைப் போலவே, புரோட் டஸ்டண்ட் நிறுவனங்களும் அந்தந்தப் பகுதியில் செயல்படும் தொன்மையான அமைப்பு நிர்வாகிகளுடன் ஒன்றுபட்டு செயல்பட்டும், உதவி செய்தும் காரியமாற்றின. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புரட்சிகர இயக்கங்களில் செயல்பட்ட முன்னோடிகளையும் கூட விலைக்கு வாங்கி இன்று தொண்டு நிறுவனங்களின் முன்னணி அமைப்பாளர்களாக மாற்றியுள்ளனர். இவ்வாறு அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் புதிய காலனியாதிக்கத்திற்கும், உலக மேலாதிக்கத் திற்கும் தொண்டு நிறுவனங்கள் சேவை புரிகின்றன.
ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி கூர்மையடைகிறது
               
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தீர்வு காண முடியாமல் நீடிக்கிறது. மூலப்பொருட்களுக்கானத் தேவை, பொருளாதார நெருக்கடி தொடர்வது போன்ற தேவைகளிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாடுபிடிக்கும் போட்டி கடுமையாகத் தீவிரமடைகிறது. அது இன்றைய உலகின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரசிய ஏகாதிபத்தியமோ, சீனாவோ அமெரிக்காவின் இத்தகைய மூர்க்கத்தனத்திற்கு பதிலடி கொடுக்கத் தயாரில்லை.
             
 அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இவ்விரு நாடுகளும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தங்களது எதிர்ப்புகளைக் காட்டுகின்றன. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. ஆனால் லிபியா தாக்கப்பட்டபோதும், சிரியா இன்று தாக்குதலால் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதும் இந்நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகக் கண்டன அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன. “பிரிக்” நாடுகளின் கூட்டமைப்போ அல்லது ஷாங்காய் கூட்டமைப்போ அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராக எந்தவித எதிர்ப்பு நடவடிக் கைக்கும் தயாராக இல்லை.
               
ஐரோப்பாவைச் சார்ந்த பிரான்சும், ஜெர்மனியும் தங்களுக் குள் போட்டி போடுகின்றனவே ஒழிய அமெரிக்காவை எதிர்த்து ஒரு வலிமையான கூட்டணியை கட்டுவதற்கு தயாராக இல்லை. ஜப்பான் கூட அமெரிக்காவின் முகாமில் முடங்கிக் கிடக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் போர் எதிர்ப்பு இயக்கங்கள் கூட முனை முழுங்கிய நிலையில் உள்ளன. இத்தகைய ஒரு சூழலில் மூன்றாம் உலக ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்த மக்கள் பிரிவினர் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தும் - புதிய காலனிய உலக மறுபங்கீட்டிற்கு எதிராகவும் எதிர்த்துப் போராடுவதுதான் ஒரே தீர்வாக உள்ளது.

புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மன்மோகன் கும்பலும் - தொண்டு நிறுவனங்களும்

 மத்தியில் ஆளும் மன்மோகன் சோனியா கும்பலின் அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக செயல்படும் ஒரு அரசாகவே உள்ளது. ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களிலிருந்து அமெரிக்காவுடன் அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைப் போட்டு இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவருகிறது. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தம் இந்திய இராணுவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான போரில் ஒரு எடுபிடிப் படையாக பயன்படுத்தவும், ஆசியாவில் சீனாவை எதிர்த்து இந்தியாவைப் பயன்படுத்தவும் சேவை செய்கிறது. அணுசக்தி ஒப்பந்தமோ இந்தியாவின் சுயேட்சையான அணுதிட்டத்தை ஒழிப்பதோடு, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற “ஹைடு” சட்டத்தின் நிபந்தனைக்கு உட்படுத்துகிறது.
               
இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து லிபியா, சிரியா மற்றும் ஈரான் பிரச்சினையில் அமெரிக்கா வுக்கு சாதகமாக  ஐ.நா சபையில் செயல்படுகிறது, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைத்துக் கொண்டது. இவ்வாறு இந்திய அரசு அமெரிக்காவின் புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்கிறது. எனவேதான் அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனங்களை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. அவைகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வரும் நிதியை தடை செய்யவும், அந்த அமைப்புகளைத் தடை செய்யவும் மறுக்கிறது.
               
அன்னா அசாரே தலைமையிலான “ஊழல் எதிர்ப்பு இந்தியா” அமைப்பும், கேசரிவாலின் “ஆம் ஆத்மி” கட்சியும், சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பும், இன்னும் ஏராளமான மனித உரிமை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்குகின்றன. இத்தகைய அமைப்புகள் அனைத்தும் அமெரிக்காவின் நலன்களிலிருந்து இந்திய அரசை நிர்ப்பந்திக்கவும், ஆட்சியாளர்கள் அடிபணிய மறுத்தால் ஆட்சி மாற்றத்திற்கும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

  “பிரிக்” நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா பங்கேற் றிருப்பது, அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவோம் என்று பேசுவது ஆகியவற்றுக்கு எதிராகவும், அணு உலைகள் அமைப்பதில் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதை தடுப்பது, இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திப்பது போன்ற காரணங்களுக்காகவும்தான் அமெரிக்க ஆதரவு அரசுசாரா அமைப்புகள் அரசை எதிர்த்துப் போராடுகின்றன. அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் புரிகின்றன.
             
 இத்தகைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு எதிராகவும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அணுசக்தி, இராணுவ ஒப்பந்தகளை எதிர்த்தும்; புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்தும் அனைத்து புரட்சிகர தேசபக்த ஜனநாயக சக்திகளும் ஓரணியில் அணிதிரள்வது அவசியமாகும். அத்தகைய ஒரு போராட்டத்தில் அரசுசாரா அமைப்புகளை குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும்  அரசுசாரா அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தும் செயல்தந்திரங்களையே புரட்சிகர பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டும். தொண்டு நிறுவனங்களை தனிமைப்படுத்துவதா, எதிர்த்து மோதுவதா என்றப் பிரச்சினையை வர்க்கப்போராட்ட வளர்ச்சிப் போக்குதான் தீர்மானிக்கிறது. எனவே இன்றைய சூழலில் அரசுசாரா அமப்புகளை, ஏகாதிபத்திய சேவகர்களை தனிமைப்படுத்தும் நிலையையே செயல்படுத்த வேண்டியுள்ளது.
               
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க போர் பற்றியும், அதன் புதியகாலனிய அரசியல் பொருளாதாரம் பற்றியும் - அரசுசாரா அமைப்புகளைப் பற்றிய இன்றைய உண்மை நிலவரங்களோடு, அதன் வரலாறு பற்றியும், தெளிவாக விளக்குகின்றன. இதை படித்து அறிந்துக்கொண்டு அனைத்து மக்களிடமும் “தொண்டு நிறுவனங்கள்” ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை உணர்வை கொண்டு செல்வோம்!!

சர்வதேச ஆய்வு நிறுவனம்
 
---------------------------------------------------------------------------------------------------------------------

நூல் உள்ளடக்கம்
1) அமெரிக்கா திட்டமிட்டு உருவாக்கிய “அரபு வசந்தம்”

2) எகிப்தில் போலி ”சகோதரத்துவத்தை” அரியணை ஏற்றும் அமெரிக்காவின் முயற்சி!

3) ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியும் இராணுவத் தலையீடும் (லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க-நேட்டோவின் முயற்சியா?

4) “லிபியப் போரும்” எண்ணெய்க்கான யுத்தமும்

5) பேரரசின் இருபக்க கூர்வாள் (உலகு தழுவிய இராணுவம் - அரசு சாரா நிறுவனங்கள் (NGO))

6) நிறப் புரட்சிகள்: அடுத்தது அர்ஜென்டினாவா?
-------------------------------------------------------------------------------------------------------------------------
 
வாங்கிப் படியுங்கள்!                          வாழ்வுக் கொடியை ஏந்துங்கள்!!

Thursday 24 January 2013

இராமதாஸ் கும்பலின் சாதி வெறியாட்டத்தை தகர்க்கும் கழக முழக்கங்கள்!

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
 
“அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை”
 
முறியடிப்போம்!

* கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு,
தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என
தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!

* சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!

*சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!

*ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2013

Tuesday 22 January 2013

கூடங்குளம் அணு உலையைத் திற! கழகம் போர்க்கொடி! !

விழுப்புரத்தில் கழக  முழக்கம்,
கூடங்குளம் அணு உலையைத் திற!

கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது.
அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான் என்றும், அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத்து என்றும் கிறித்துவத் திருச்சபைகளும், தொண்டுநிறுவனங்களும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும் அணு விஞ்ஞானத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். பூமி தட்டைதான் என்றும், நெருப்பு கண்டிபிடிப்பை எதிர்த்தும்,விஞ்ஞானிகளை கொன்றொழித்த இந்த பிற்போக்கு சக்திகள்தான் இன்று அணுசக்தியை எதிர்க்கின்றன. அணுசக்திக்கு எதிராக அவர்கள் எழுப்புகின்ற அறிவுபூர்வமானகேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்று இந்த ஞானசூன்யங்கள் பேசித்திரிகின்றன.

சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போது அணு உலையை பாதுகாக்க முடியாது. அதுசமயம் உலைவெடித்து கதிர்வீச்சு காரணமாக கடும் உயிர்சேதம் ஏற்படும் என்றும்; அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளிலிருந்து பல ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்றும் அணுசக்திக்கு எதிராக பீதியூட்டி, அச்சுறுத்தி அணு உலை கூடாது என்று போராடி வருகின்றனர். அணுசக்தியை மின்சக்தியாக மாற்றவே முடியாது என்றும் அணுசக்தி விஞ்ஞானம் காலாவதியாகிவிட்டது என்றும் கூறி விஞ்ஞானத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

பூகம்பத்தையும், புயலையும் எதிர்கொள்ளும் அணு உலைகள்

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச்சில் ஏற்பட்ட சுனாமியால் அணு உலை உருகி மக்கள் மாண்டுபோயினர் என்று கூறி கதிர்வீச்சு பீதியூட்டுகின்றனர். ஆனால் ஜப்பானில் புகுஷிமாவில் அணு உலை உருகியதற்கு சுனாமி காரணம் அல்ல என்றும், அதற்கு முழுக்க முழுக்க மனிதத் தவறுகள்தான் காரணம் என்று அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வறிக்கைக் கூறுகிறது. புகுஷிமா அணு உலைகளில் தனியார் முதலாளிகளின் இலாபவெறியால் பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிகள் சரிவர கடைபிடிக்கப்படாததும், அணு உலை துருப்பிடித்துவிடும் என்ற காரணத்தினால் கடல் நீரைக் கொண்டு அணு உலையை குளிரூட்டுவதற்குத் தடைவிதித்ததுதான் கதிர்வீச்சுக்கு காரணமாக அமைந்து விட்டது. அண்மையில் கூட ஜப்பானில் ஏற்பட்ட அதே அளவு பூகம்பத்தின்போது அணு உலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் வீசிய சண்டிப் புயலின்போது கூட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகள் பாதுகாப்புடன் இயங்கிக்கொண்டுதான் உள்ளது. அணுகுண்டு பாதிப்பிற்கும், அணு உலை கதிர்வீச்சுக்கும் ஆளான ஜப்பான் நாட்டுமக்களே தற்போது அணு உலை ஆதரவாளர்களைத்தான் ஆட்சியில் அமரவைத்துள்ளனர். தகுந்த பாதுகாப்புடன் அணு உலைகளை இயக்குவோம் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துவிட்டது. ஏன்நமது கல்பாக்கம் அணு உலை பலதலைமுறைகளைக் கடந்து - பல புயல்களையும் சுனாமியையும் சந்தித்து தலைநிமிர்ந்து இயங்கிக்கொண்டுதான் உள்ளது.


அணுக் கழிவு ஆபத்து என்பதும் பீதியே!

அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஆபத்து என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அணுக் கழிவை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்புகிறது. கர்நாடக கோலார் சுரங்கத்தில் கூடங்குள அணுக் கழிவுகளை வைப்பதை எதிர்த்து அம்மாநில மக்கள் போரடியதால் மத்திய அரசு அந்தத்திட்டத்தை கைவிட்டுள்ளது. அணுக்கழிவுகளால் மாபெரும் ஆபத்து என்று மக்களை நம்பவைத்துள்ளனர் அணு உலை எதிர்ப்பாளர்கள். ஆனால் அணுக்கழிவுகள் உண்மையில் ஆபத்து நிறைந்தத்துதானா?

இல்லை என்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சேகர்பாசு கூறுகிறார். அணு உலைகளில் யுரேனியம் எரிக்கப்பட்டு கழிவாக வெளியேறும் அனைத்தும் பயன்படுத்தமுடியாத கழிவுகள் அல்ல. அந்தக்கழிவுகளை சுத்திகரித்து, வீரியப்படுத்தி புளூடோனியமாக மாற்றி மறுசுழற்சி மூலம் மீண்டும் எரிபொருளாக 98 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கழிவுகளாகும். அனல் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளோடு ஒப்பிடும்போது அணுமின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் 30,000 மடங்குக் குறைவாகும். உண்மையில் நிலக்கரி சாம்பலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுதான் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கின்றன.

அணு உலைக் கழிவுகளை மிகக் குறைவான இந்தக் கழிவுகளைப் பாதுகாப்பான இரும்புப் பெட்டகத்தில் வைத்து, பூமிக்கு அடியில் ஆழத்தில் மிகவும் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்படுகிறது. அணுக் கழிவுகளில் 99 சதவீதம் அணுக்கதிர்வீச்சை வெளியிடுபவை அல்ல. ஒரு சதவீதம்தான் கதிர்வீச்சுத் தன்மை வாய்ந்தது. அதையும் பிரித்தெடுத்து உயர் அழுத்த அணு உலைகளில் போட்டு உடைத்து அதன் வீரியத்தை அழிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் சேகர்பாசு கூறுகிறார். மாறாக அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பனால்தான் புவி வெப்பமடைந்து, பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து பலநாடுகளில் மீனவ கிராமங்கள் நீரில் மூழ்கிப்போகும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 25 அணு உலைகளைக் கட்டவேண்டும் என்று சர்வதேசிய அணுசக்திக் கழகம் முடிவெடுத்திருந்திருந்தது. தற்போது அணு உலைகளை மூடவேண்டும் என்பதன் மூலம் மீனவ மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். மீனவ நண்பனாக நடித்து அம்மக்களுக்கு எதிராக சகுனிபோல் செயல்படுகிறார் சுப.உதயகுமார். இவ்வாறு புயலையும் பூகம்பத்தையும் வைத்து அச்சுறுத்தி அணு உலைக்கு எதிராக போராடுகிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளும் அணு உலைகளும்

அணுசக்தி தொழில்நுட்பங்கள் காலாவதியாகி விட்டது. அதை பயன்படுத்தவே முடியாது. எனவேதான் புகுஷிமாவிற்குப் பிறகு உலகின் பலநாடுகள் அணு உலைகளை மூடப்போவதாக அறிவித்துவிட்டன. இத்தகைய சூழலில் இந்தியாவில் அணு உலையை துவங்கக்கூடாது என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அணு உலைகளை மூடுவது என்பது புகுஷிமாவிற்கு முன்பே துவங்கிவிட்டது. அவ்வாறு அணு உலைகள் மூடப்படுவதற்கு தொழில்நுட்பங்கள் காரணம் அல்ல. இன்று உலகில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகள்தான் உண்மையானக் காரணமாகும்.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ மிகைஉற்பத்தி நெருக்கடி, ஐரோப்பா, ஜப்பான் என்று அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. தீர்வுகாண முடியாமல் பொருளாதார நெருக்கடி தொடர்வதால் கடன் சந்தை அருகிப் போவது, அரசாங்க கஜானா காலியாகிவிட்டதால் அரசின் உதவி அணு உலைகளுக்கு கிடைக்காமல் போவது போன்றக் காரணங்களால் அணு உலைகள் அமைப்பதற்கான திட்ட செலவினங்கள் கட்டுப்படியாகாமல் போகிறது. பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனம் 1650 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பிற்கு 2005ல் 3.3 பில்லியன் யூரோ என விலையை தீர்மானித்தது. ஆனால் 2010ல் அதன் விலை 8.5 பில்லியன் யூரோ என 3 மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே அணுசக்தியை பயன்படுத்த முடியாத அளவிற்கு முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது. முதலாளித்துவப் பொது நெருக்கடியின் காரணமாக எப்படி பல்வேறு தொழில்கள் நலிவடைந்து மூடப்படுகிறதோ அதே கதிதான் அணு உலைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அணு உலைகளை மூடுவது என்று அனைத்து நாடுகளும் முடிவெடுக்கவில்லை. ஜப்பான் தனது நிலையை மாற்றிக்கொண்டுவிட்டது. ரஷ்யா, சீனா, பிரேசில், இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகள் புதிதாக பல அணு உலைகளை அமைத்து வருகின்றன. எனவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி அணு உலைகளை மூடுவதல்ல, மாறாக முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பாட்டாளிவர்க்கப் புரட்சியை - தேசிய விடுதலைப் புரட்சியை முன்னெடுப்பதுதான் ஒரே வழி. அதை விடுத்து தொழில்நுட்பத்திற்கு எதிராக போரிடுவது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பாதுகாக்கும் துரோகமேயாகும். உண்மையில் கதிர்வீச்சு அபாயம், கழிவுகள் பாதுகாப்பு என்று கூறி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்குப் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்கள் ஒழிந்து கிடக்கின்றன.

அமெரிக்காவின் புதிய காலனியாக இந்தியாவை மாற்றும் அணுசக்தி இராணுவ ஒப்பந்தங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பம் முதலே கூடங்குளம் அணு உலையை எதிர்த்தே வந்துள்ளனர். இந்திராகாந்தியின் காலத்தின் போதும், பின்னர் வாஜ்பாய் ஆட்சியின் போதும் இந்தியா தமது தற்காப்பிற்காக அணு குண்டு சோதனை செய்ததை எதிர்த்து அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதை முறியடிக்கவே சோவியத் ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கூடங்குள திட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றவும் இந்தியாவில் தமது புதியகாலனிய ஆதிக்கத்தை நிறுவவும் இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை போட்டபின்பே அந்தத் தடைகளை அமெரிக்கா நீக்கியது.

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் ஆற்றல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு சேவைசெய்கிறது. இந்தியா அணுசோதனை செய்யக்கூடாது. இந்தியாவின் அணுமின் நிலையங்களை அமெரிக்காவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும். இந்தியாவின் சுயேட்சையான மூன்றுகட்ட அணுமின் திட்டத்தை கட்டுப்படுத்துவது, ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் எரிவாயு இறக்குமதியை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரம் அல்லாத அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் நிபந்தனைகளையும் ஏற்றபிறகுதான் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்தது.

அணுசக்தி ஒப்பந்தம் போட்டபின்பும் அமெரிக்காவால் இந்தியாவில் ஒரு அணு உலை கூட தொடங்கமுடியவில்லை. இந்தியச் சட்டப்படி அணு உலையில் விபத்து நடந்தால் நட்ட ஈடு ரூ.500 கோடி வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்ததே அமெரிக்கா அணு உலை நிறுவ முடியாததற்கு காரணமாக இருந்தது. கூடங்குளத்தில் ரசியா அப்படி எந்த நட்ட ஈட்டையும் கொடுக்காமல் அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறது. எனவே தங்களுக்கும் அந்த சலுகை வேண்டும் என்று அமெரிக்கா வாதிடுகிறது. கூடங்குளத்தில் ரசியாவும்; ஜெய்தாபூரில் பிரான்சும் அமைக்கும் அணு உலைகளை ஒழித்தால்தான் இந்தியச் சந்தையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும் என்று அமெரிக்கா தமது அடிவருடிகள் மூலம் எதிர்ப்புப் போராட்டங்களை திட்டமிட்டு நடத்திவருகிறது. ரசியாவோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தபோது இந்தியாவில் அனைத்து உலைகளுக்கும் யுரேனியம் வழங்குவது என்ற அடிப்படையில் கூடங்குளம் ஒப்பந்தம் போட்டோம். எங்களை மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது என்று கூறியும், நட்ட ஈட்டு தொகை வழங்கினால் அணு உலை திட்ட செலவினங்கள் அதிகரிக்கும் என்று கூறியும் நட்ட ஈடு வழங்க மறுக்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஆற்றல் துறையின் மீது தமது மேலாதிக்கத்திற்காகவே கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போராட்டத்திற்கு ஊக்கமுடன் ஆதரவளித்து வருகிறது.

பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பு எனும் பேரில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் உலகை பலமுறை அழிக்கவல்ல அணு ஆயுத ஏகபோகத்தை வைத்துக்கொண்டு உலக மக்களையே அச்சுறுத்திவருகின்றனர். தமக்கு அடங்கி நடக்கும் நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்பதை மறைமுகமாக ஆதரிக்கும் இந்த நாடுகள், தமக்கு அடிபணியாத நாடுகள் அணுமின்சாரம் தயாரிப்பதைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றன. மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்க நாடுகளில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு ஆற்றல்கள் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவுமே ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, பயங்கரவாதத்தை அழிப்பது எனும் பேரில் இராணுவ ரீதியில் தலையிட்டு - அந்நாட்டு அரசுகளை கவிழ்த்து அங்கு ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியுள்ளது.

அரபு வசந்தம்என்ற பேரில் தமது அடிவருடி அரசுகளையும்கூட கவிழ்க்கிறது அமெரிக்கா. எகிப்து, லிபியா, ஏமன் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தமது கைப்பாவை ஆட்சிகளை உருவாக்கியுள்ளது. புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தி உலகமுதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை தங்கள் மீது திணிப்பதை எதிர்த்தும், அந்நாடுகளின் சர்வாதிகார அரசுகளை எதிர்த்தும் அந்நாட்டு மக்கள் போராடியதை பயன்படுத்திக்கொண்டு தொண்டு நிறுவனங்களின் மூலம் அப்போராட்டங்களை தமக்கு சாதகமாக அமெரிக்கா மாற்றிக்கொண்டது. மனித உரிமை மீட்பு, ஜனநாயகம் காப்பு, ஊழல் ஒழிப்பு எனும் பேரில் உலகில் எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவேன் என்று அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதற்கு தொண்டுநிறுவனங்கள் சேவை செய்கின்றன.

அண்மையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அந்நாட்டு அரசாங்கம் தனியார் மயமாக்கத்தை ஒழித்து தேசியமயமாக்கல்கொள்கைகளையும், சர்வதேச நிறுவனங்களின் கொள்ளைக்கார கொள்கைகளை மாற்றி புதிய கொள்கைகளையும் அந்த அரசு செயல்படுத்துகிறது. அங்கு அரசாங்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தை அரபு வசந்தம்என்றழைத்து அப்போராட்டத்தை உயர்மட்டத்தில் இருப்பவர்களின் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும், உயர்பீடத்தில் நிகழும் மாபெரும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களாகவும் சித்தரித்து அரசு கவிழ்ப்பு நடவடிக்கையில் அமெரிக்காவும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதற்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகளாக செயல்படும் தொண்டுநிறுவனங்கள்

இந்தியாவிலும் கூட அமெரிக்காவின் ஆதரவு மன்மோகன் கும்பலின் ஆட்சியை தமது நலன்களுக்கு முழுமையாக பணியவைப்பதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கவும், மக்களின் போராட்டம் புரட்சிப் போராட்டமாக மாறினால் அதைப் பயன்படுத்தி தமது அடிவருடிகளின் பொம்மை ஆட்சியை உருவாக்கவும் தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கமும், சுப.உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் எதிர்ப்பு இயக்கமும், கேசரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்ற ஒரு ஐந்தாம்படை அமைப்புகள்தான்.

அமெரிக்காவின் அணு ஆயுதத்தை ஒரு போதும் எதிர்க்காத சுப.உதயகுமார், அமெரிக்க-இந்திய இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாத உதயகுமார், ரசியாவுடனான ஒப்பந்தங்களை நாட்டின் மீதான ஆதிக்கம் என்று எதிர்ப்பதும் கூடங்குளம் ஆபத்து என்று எதிர்ப்பதும் அமெரிக்காவிற்கு ஆதரவு என்பதைத்தவிர வேறென்ன. ஊழல் ஒழிப்பு பேசுகின்ற அன்னா அசாரே, கேசரிவால் போன்றவர்கள் ஊழல் புரிகின்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், அதற்கு கடுமையான சட்டம் தேவை என்று கூறுகின்றனர். ஆனால் ஊழலுக்குக் காரணமான பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதில்லை. அண்மையில் சில்லரை வர்த்தகத்தில் நுழைவதற்கு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியர்களுக்கு ரூ.125 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளது. இந்த ஊழல் எதிர்ப்பு சாகசக்காரர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இராணுவ அதிகாரிகள் வடகிழக்கு மாகாணங்களில் பெண்களை கற்பழித்து கொலைசெய்வதை எதிர்க்காதவர்கள், இராணுவ சிறப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடாமல், சாதிய வெறியர்கள் கௌரவக் கொலைகள் புரிவதை எதிர்க்க மறுப்பவர்கள் டில்லிப் பெண்ணின் மீதான பாலியல் பலாத்காரத்தை எதிர்ப்பது எல்லாம் வெற்று அரசியல்தான். இத்தகைய போராட்டங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சியை நிறுவ இந்திய மக்களை திரட்டுகின்ற தேசத்துரோகம்தான்.

தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடு, கூடங்குளத்தை உடனே திற!

மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு அந்நிய நாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூறினாலும் அதை எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தற்போது அந்நிய நிதி உதவியை தவறாக பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களைத் தடை செய்யப் போவதாகக் கூறுகிறது. ஆனால் அந்நிய நாட்டிலிருந்து நிதி உதவிபெறும் அனைத்து அமைப்புகளையும் தடைசெய்யவும் நிதி உதவியை தடுத்து நிறுத்தவும் மறுக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. அயலுறவு ஒப்பந்தங்களை செய்துகொள்ள அரசுக்கு அதிகாரமுண்டு என்று பேசிய மன்மோகன் கும்பல் ஏன் ரசியாவுடனான ஒப்பந்தங்களை நீதிமன்றத்தில் விவாதிக்க அனுமதித்தது. நாம் கூறுவது அனைத்து அயலுறவு ஒப்பந்தங்களையும் மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான்.

அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்கள்தான் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாகவும், ஆற்றல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் ஏகபோகத்தை நிறுவவும் இந்தியாவின் சுயேச்சையான மின் திட்டங்களை ஒழிக்கக் கூடியதுமாகும். ரசியாவுடனான கூடங்குள அணு உலைகள் ஒப்பந்தம் ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில் இருந்தபோதிலும் அதில் இந்தியாவின் மீது காலனியாதிக்கம் செலுத்தக்கூடிய அல்லது மேலாதிக்கம் செலுத்தக்கூடிய அமெரிக்காவின் ஹைட் சட்டம் போன்ற நிபந்தனைகள் இல்லை. எனவே அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை ஒழித்து - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதுதான் இந்திய மக்களின் நலன்களை காக்கும் ஒரே வழியாகும். அதே சமயம் ரசியா, பிரான்ஸ் உதவியுடன் திறக்கபப்டும் அணுமின் உலைகளுக்கான நட்ட ஈட்டையும், பாதுகாப்பையும் அந்நிறுவனங்கள் உத்திரவாதம் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றவேண்டும் என்ற உத்திரவாதத்துடன் இந்த அணு உலைகளைத் திறக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

நாட்டில் நிலவும் மின் பற்றாக் குறையால் வேளாண்மை அழிந்து விவசாயிகள் தற்கொலை புரிந்து வரும் சூழலில், சிறு தொழில்கள் விசைத் தறிகள் நலிவடைந்து அழிந்துவரும் சூழலில், சில்லரை வணிகம், மின்வெட்டால் பாதித்துவரும் இன்றைய சூழலில் கூடங்குளம் அணு உலையை திறந்து இயக்கிக்கொண்டு மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தவேண்டும். ஏற்கெனவே பாதுகாப்பு பிரச்சினையில் 17 அம்சங்களில் 10 அம்சங்களை நிறைவேற்றியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. எனவே மீதியுள்ள 7 அம்சங்களையும் உலையை இயக்கிக்கொண்டே தீர்க்கமுடியும். அவ்வாறு தீர்ப்பதற்கு மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கமிட்டி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பேசித் தீர்க்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டும்.

மத்திய அரசே! தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கு

தமிழகத்தை ஆளும் ஜெயா அரசாங்கம் ஆரம்பத்தில் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்களை ஆதரித்தது. தற்போது கூடங்குளம் அணு உலையை திறப்பதை ஆதரிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டு கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்திற்கே கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் கோருகிறது. மத்திய அரசிடம் 2,000 மெகாவாட் உபரி மின்சாரம் இருக்கின்ற சூழலில், தமிழகத்தின் 4,000 மெகாவாட் மின்பற்றக் குறையால் பொருளாதார சமூக வாழ்க்கை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தற்காலிகமாக மத்திய அரசு தமிழகத்திற்கு அனைத்து மின்சாரத்தையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்மக்களின் சார்பாக கோருவது நியாயமானதும் அவசியமானதுமாகும்.

எனவே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கூடங்குளம் அணு உலையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நட்ட ஈட்டை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.

  • கூடங்குளம் அணு உலையைத் திற!
  • மக்களுக்கான பாதுகாப்பு, இழப்பீட்டை உத்தரவாதம் செய்!
  • அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!
  • அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!
  • தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஜனவரி 2013