Friday 22 March 2013

மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதோடு ஈழத்தமிழருக்கு ஆதரவான ஒரு பொது இயக்கத்தை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்!

இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட்சேவைக் கூண்டிலேற்றவும், தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்புக்கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம்  வெல்க!
 
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!

ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா ஒரு உப்பு சப்பில்லாத தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அந்தத்
தீர்மானத்தைத் திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான "டெசோ'' அமைப்பினரும், தமிழக முதல்வர்
ஜெயலலிதாவும் மத்திய அரசை நிர்பந்தித்து வருகின்றனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில்
போராடும் பெரும்பான்மை மாணவர்கள் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வெறும் நாடகம் என்றும் இலங்கையில் சர்வதேச விசாரணை
வேண்டியும் தமிழீழ தனிநாடு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா தனியாக தீர்மானம் கொண்டு வர
வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழரின் விடுதலைக்கான ஒரு சரியான நிலைபாட்டை எடுக்கவும், மாணவர்களின் போராட்டத்தை ஒரு பொது இயக்கமாக மாற்றுவதற்கும் மேற்கண்ட போக்குகளை பற்றி ஒரு பரிசீலனை செய்வது அவசியமாகும்.

அமெரிக்காவின் ஐ.நா தீர்மானம் ஈழத்தமிழர் துயர்துடைக்குமா?

அமெரிக்கா ஐ.நா.வில் முன்வைத்துள்ள தீர்மானம் இராஜபட்சே கும்பலை இன அழிப்புப் போர்க்குற்றவாளி என்று கூறவில்லை அல்லது அமெரிக்கா
கூறுகின்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச பொது விசாரணையையும் அது கோரவில்லை. இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை என்பதை ஏற்காமல் அதை ஒரு மனித உரிமை மீறலாகவே அமெரிக்கா பார்க்கிறது.

மேலும், இலங்கை அரசாங்கம் அமைத்த கற்றுக்கொண்ட படிப்பினைகளுக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணையம் (Lessons Learnt and Reconciliation Commission) விசாரித்து கண்டவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி இராஜபட்சே கும்பலுக்கு வேண்டுகோள் வைக்கிறது அவ்வளவுதான்.

அதாவது, கொலைகாரர்களையே நீதிபதிகளாக மாற்றியுள்ளது அமெரிக்கத் தீர்மானம்.

இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள எல்.எல்.ஆர்.சி (LLRC) ஆணையம் முன்வைத்துள்ள தீர்வுதான் என்ன?

அந்த அறிக்கையில் 2008-09 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் தமிழ் ‘பயங்கரவாதிகள்’ மீது போர் நடத்தி அவர்களை
தோற்கடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போரில் இலங்கை அரசுக்கு தலைமை தாங்கியோரும், இலங்கை இராணுவத்திற்கு தலைமை
தாங்கியோரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நற்சான்று அளித்துள்ளது. இலங்கைப் படையின் கீழ்நிலை பொறுப்பிலுள்ள சிலர் மனித
உரிமை மீறல்கள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.அதிகாரப்பகிர்வு, வடக்கு மாநிலத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுதல், பேச்சுரிமை அளித்தல் போன்றவற்றை எல்.எல்.ஆர்.சி பரிந்துரைத்தாலும் அப்பரிந்துரைகளை இராஜபட்சே கும்பல் எள்ளளவும் சட்டை செய்யவில்லை.
 ஆனால் போரின் போது நடந்ததாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய 207 பரிந்துரைகளில் 113 பரிந்துரைகள் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், மீதி 94 பரிந்துரைகளை ஏற்க முடியவில்லை என்றும்இலங்கை அரசு கூறியுள்ளது.

ஏற்கப்பட்ட பரிந்துரைகளில் மும்மொழித்திட்டம், தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுதல், இராணுவமுகாம்களில் இருப்பவர்களை திருப்பி அனுப்புதல், உயர் பாதுகாப்பு பகுதியிலிருந்து இராணுவத்தை விரைவில் திரும்பப் பெறுதல் அடங்கும்.

இவை இந்தியாவின் கோரிக்கையை எற்று பெறப்பட்ட கோரிக்கைகள்
ஆகும்.

சென்ற ஆண்டு ஐ.நா. மனித உரிமை அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்தவே இல்லை. மாறாக, தமிழின
அழிப்பு நடவடிக்கைகளை இராஜபட்சே கும்பல் தொடர்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று கைது செய்யப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள்,
பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழர் பகுதி முழுவதும் ராணுவமயமாக்கப்பட்டு
சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டது. போர் நடைபெற்ற பகுதியில் புனரமைப்புச் செய்ய இந்தியாவும், உலக நாடுகளும்
கொடுத்த நிதியில், போரில் பலியான சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள், ஊனமுற்ற சிங்கள வீரர்களுக்கு மறுவாழ்வு என்று பல பணிகள்
நடக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இவ்வாண்டு அமெரிக்கா ஜ.நா. மன்றத்தில் அறிக்கை முன்வைப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின்
ஹைகமிஷ்னர் நவனீதம் பிள்ளை பேசும்போது “கடந்த ஆண்டு ஐ.நா வில் வலியுறுத்திய மக்கள் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு
மதிப்பளிக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா என்பதை அறிய சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழர்களை வடக்கு மற்றும் கிழக்கில் குடியமர்த்தி அங்கிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி பொதுஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டும். யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்''. என்று இலங்கைக்கு எதிரான தனது
கருத்தை பதிவு செய்தார்.

கடந்த ஓராண்டு அனுபவத்தில் இலங்கையில் நிலவும் நிகழ்வுகளை கணித்த பிறகு ஐ.நா.வில் நவனீதம்பிள்ளை மேற்கண்டவாறு தனது கருத்தை
முன்வைத்துள்ளார். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அந்த நியாயமானக் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

உண்மையில் அமெரிக்கா " ஜனநாயகம்”, "மனித உரிமை” என்ற பேரால் துனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் தலையிட்டு அந்த அரசுகளை
கவிழ்த்து எப்படி அந்நாடுகளில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவிக் கொண்டதோ அதே போல் இலங்கையையும் தமது பொம்மை ஆட்சியாக மாற்றும் நோக்கத்திற்காகத்தான் அமெரிக்கா இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இராஜபட்சே கும்பல் சீனாவுடன் கூடிக்குலாவுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அது அமெரிக்காவிற்கு எரிச்சலை உருவாக்குகிறது. இலங்கை அரசை லேசாக ஒரு தட்டுத்தட்டி தன்பக்கம் கொண்டுவருவதுதான் அமெரிக்காவின் திட்டம். அதன் மூலம் இலங்கையை மட்டுமல்ல இந்துமகா
சமுத்திரம் முழுவதையும் தமது ஆளுமைக்குள் கொண்டு வருவதுதான். அமெரிக்காவின் மனிதநேய நாடகம் இலங்கை மீது தமது மேலாதிக்கத்தை
நிலை நாட்டுவதற்கானதேயாகும்.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தென் ஆசியாவிலும் இந்து மகா சமுத்திரத்திலும், தங்களது செல்வாக்கு மண்டலத்திற்காகவும் அமெரிக்காவுடன் போட்டியிடுவதற்கும், இலங்கையை தங்களது தளமாக பயன்படுத்துவதற்கும் தான் இலங்கை இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஐ.நா.வில் எதிர்த்து முறியடிக்கின்றன. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறுகின்ற இந்த
நாடுகள் ஈழத்தமிழின அழிப்பு போருக்கு துணைபோவதையும், இன அழிப்பு போர் குற்றவாளியான இராஜபட்சேக் கும்பலை பாதுகாப்பதையும் ஏற்க
முடியாது. எனவே ஏகாதிபத்திய வல்லரசுகளின் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்கான போட்டியை எதிர்த்தே ஈழத்தமிழினம் விடுதலையை
வென்றெடுக்க முடியும். மாறாக அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும் லாவணிபாடுவது
ஈழத்தமினத்திற்கு செய்யும் துரோகமேயாகும்.

இன அழிப்புப் போர்க்குற்றத்தில் பங்காளியே இந்திய அரசு

மத்தியில் ஆளும் சோனியா மன்மோகன் கும்பல் கருணாநிதியின் நிர்பந்தத்திற்கோ, ஜெயலலிதாவின் கடிதத்திற்கோ அசைந்து கொடுப்பதாக இல்லை.

மாணவர்களின் போராட்டத்திற்கோ ஒட்டுமொத்தமான தமிழகத்தின் குரலுக்கோ செவிசாய்க்கத் தயாரில்லை. சென்ற ஆண்டைப் போலவே இந்த
ஆண்டும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள உப்புசப்பில்லாத தீர்மானத்தையும், நீர்த்துப்போகச் செய்யும் வேலையையே செய்கிறது. கடைசிவரையில்
அமைதிகாத்து ஈழத்தமிழினத்திற்கு துரோகமிழைத்து இராஜபட்சே கும்பலை பாதுகாக்கும் வேலையை அமைதியாக செய்து கொண்டுள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்தில் நவனீதம் பிள்ளை சர்வதேச விசாரணைதேவை என்று கூறியதை சேர்க்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும் என்றும், ஐ.நா. அதிகாரிகள் இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஆய்வில் ஈடுபடவேண்டும் என்றும் திருத்தம் கோருகிறது இந்தியா என்று
ஜெனிவாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய அரசு இவ்வாறு இராஜபட்சே கும்பலை பாதுகாப்பதற்கான காரணம் என்ன?

இந்திய அரசு ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப்போரை
இலங்கையோடு இந்தியா கூட்டு சேர்ந்து நடத்தியது. இந்தியாவிற்காக நாங்கள் போர் நடத்தினோம் என்று கூறினான் இராஜபட்சே. இலங்கை அரசு
போர் நடத்துவதற்கு நிதி உதவி, ஆயுதத் தளவாடங்கள் வழங்குதல் போன்றவற்றுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் நேரடியாக
வழிகாட்டினர். ஈழத்தமிழின அழிப்பும் போர்குற்றவாளியாக சோனியா, மன்மோகன் கும்பலும், இந்திய அரசும் இருக்கின்றன. எனவே தான் இன
அழிப்பும் போர்குற்றவதற்கு சர்வதேச விசாரணை அமைப்பதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி ஒரு சுயேட்சையான விசாரணை நடந்தால்
எங்கே தாமும் பதில் சொல்லவேண்டி வருமோ என்று தான் இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளில் விரிவாதிக்க கொள்கைகளையும் உள்நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் கடைபிடிக்கிறது.

தென்னாசியாவில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா அண்டை நாடுகளில் தலையிடுகிறது. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றநாடுகள் தலையிடக்கூடாது என்று ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கும் இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டது. இலங்கையின் மீதான தமது துணை மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், சீனாவின் செல்வாக்கை கட்டுபடுத்துவதற்கும் இராஜபட்சே கும்பலை இந்திய அரசு தொடர்ந்து ஆதரிக்கிறது. ஈழத் தமிழின அழிப்புக்குத் துணைபோகிறது.
மேலும் இந்திய அரசு இந்திய நாட்டிலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைகூடமாக
திகழ்கிறது. காஷ்மீர், வடகிழக்கு, பஞ்சாப் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இரத்த வெள்ளத்தில்
ஆழ்த்துகிறது. இந்திய இராணுவம் மனித உரிமைகளை காலில்போட்டு மிதிக்கிறது. இலங்கையின் மனித உரிமை மீறலுக்காக சர்வதேச
விசாரணையை கோரினால் காஷ்மிரில் நாளை அதே கோரிக்கை எழும் என்றுதான் ஐ.நா. மன்றத்தில் இலங்கையை இந்தியா பாதுகாத்து வருகிறது.

எனவே தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்காக்கும் இந்திய அரசு எக்காலத்திலும் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கோ,
இன ஒழிப்பு போர் குற்றவாளிகளுக்கு எதிராகவோ செயல்படாது.

எனவே, இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகள் மற்றும் தேசிய
ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடி, இந்திய அரசை தூக்கியெறிந்து ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவது மூலம் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலை
போராட்டத்திற்கு நம்மால் உதவ முடியும்.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக டெசோ

இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா
கொண்டுவந்துள்ள தீர்மானத்தை அப்படியே ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு கோரியது. அதை வலியுறுத்தி
கடந்த 12ம் தேதி தமிழகத்தில் கதவடைப்பும் செய்தது. ஆனால் கருணாநிதி கூறுவது போல் அமெரிக்க தீர்மானம் இலங்கை அரசின் போர் குற்றம்
பற்றியோ, மனித உரிமை மீறல் குறித்து சுயேட்சையான விசாரணையையோ கோரவில்லை. அது ஒரு மோசடி தீர்மானம் என்று மாணவர்
அமைப்பினரும் தமிழ் தேசியக் குழுக்களும், போராடியதன் விளைவாக அந்தத் தீர்மானத்தில் திருத்தம் செய்து ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி
தற்போது கூறிவருகிறார். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் ஒரு முறை துரோகத்தை இழைக்கிறார்.

அமெரிக்கத் தீர்மானத்தை திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்காவிட்டால் பதவி விலகிவிடுவோம் என்று இன்று கூறுகிற கருணாநிதி, அன்று போர்
உச்சத்திலிருந்தபோது யுத்த நிறுத்தம் கோரி பதவி விலக மறுத்து சோனியா  மன்மோகன்சிங் கும்பலின் ஆட்சியை பாதுகாத்தார். இன அழிப்புக்கு
துணை போனார். போர் முடிந்த பிறகு இராஜபட்சேவை ஏதிர்ப்பது ஈழத்தமிழர் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று கூறி இலங்கைக்கு தூதுக்குழுவை
அனுப்பி இராஜபட்சேவுக்கு ஆதரவளித்ததுடன் பரிசு பொருட்களையும் வாங்கச் செய்தார். இவ்வாறு திமுக மற்றும் கருணாநிதியின் ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகம் தொடர்கதையாக நீள்கிறது.

ஜெயலலிதாவோ, கருணாநிதியின் கோரிக்கைகளைத்தான் இறுதியாக வழிமொழிகிறார். அமெரிக்கத் தீர்மானத்தை திருத்தத்துடன் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள் போராட்டம் விசுவரூபம் எடுத்து வருவதை ஜெயலலிதாவால் பொறுக்க இயலவில்லை.
இராஜபட்சேவை போர்க் குற்றவாளி, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை என்றெல்லாம் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர் மாணவர் போராட்டத்தை காவல்துறையை வைத்து மிரட்டியும், கைது செய்தும் வருகிறார். விடுதலைப்புலிகள் என்று உள்ளே தள்ளிவிடுவேம் என்று காவல்துறையினர் மாணவர்களை மிரட்டுகிறார்கள். ஜெயலலிதா ஒருபுறம் இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம், மறுபுறம்
மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவது என்று ஈழப்பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறார். மாணவர்கள் மீதான ஜெயா அரசின் அடக்குமுறைகளை
வன்மையாகக் கண்டிக்க வேண்டியுள்ளது.

திமுக, அதிமுக போன்ற திராவிடகட்சிகள் ராஜிவ் படுகொலைக்குபிறகு ஈழப்பிரச்சனையில் இந்திய அரசின் நிலைபாட்டையே மேற்கொள்கின்றன.
தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஈழ ஆதரவு இயக்கங்களை ஒடுக்கி வருகின்றன. இக்கட்சிகள் எதுவும் இந்திய அரசின் விரிவாதிக்கக்
கொள்கைகளை எதிர்ப்பதோ, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை யையோ இக்கட்சிகள் கோருவதோ கிடையாது. எனவே இக்கட்சிகள்
ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான பங்கு வகிக்கமாட்டா. தமிழர் பிரச்சனைகளை தங்களின் தேர்தல் அரசியலுக்கு பகடைக்காயாக
பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்குமேல் இக்கட்சிகள் ஒன்றும் செய்யப்போவதில்லை.

பா.ஜ.க. உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் முதல், இடதுசாரிகள் என்றழைக்கபடுகின்ற திருத்தல்வாதக் கட்சிகளான சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகள்
வரையிலான நாடாளுமன்றவாதக் கட்சிகள் அனைத்தும் இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளை எதிர்ப்பவைகளோ அல்லது தேசிய
இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை ஆதரிப்பவைகளோ அல்ல. எனவே தான் இக்கட்சிகள் மனித உரிமைப் பற்றிப் பேசி ஈழ மக்களின்
அடிப்படைக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றன.

ஜெனிவா கூட்டத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு சார்பான நிலையை இந்தியா மேற்கொள்ள வேண்டும், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்
தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீரமானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இது
போன்ற தீர்மானத்தை இந்தியா முன் மொழிந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. அதனல் தற்போதுள்ள
வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தீர்மானம் போட்டுள்ளது. உப்புசப்பில்லாத இலங்கை மீதான
மேலாதிக்க நோக்கம் கொண்ட அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இக்கட்சி கூறுகிறது. அதாவது இக்கட்சி கூறுவது
இலங்கை அரசு அமைத்துள்ள எல்.எல்.ஆர்.சி விசாரணை முடிவுகளை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் கடைசி காலக்கட்டங்களில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக உயர்நிலையான, நம்பகமான,
சுதந்திரமான விசாரணையை நடத்த அந்நாடு ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற நிலைபாட்டை மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில்
நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்று சி.பி.எம். கட்சி கூறுகிறது.
தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி அளிக்க முடியாது என்ற அதிபர் இராஜபட்சேவின் பிரகடனம் கவலை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் அரசியல் சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தத்தை தாண்டி தமிழர்களுக்கு அதிகாரப்பரவலை அளிக்க முடியும் என்ற தமது வாக்குறிதியை மீறிவிட்டார்.

இந்த பிரச்சனையை இந்தியா எழுப்பி, தமிழர்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்க அரசியல் தீர்வை எட்டுமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மார்ச்சிஸ்டு கட்சி கூறுகிறது.

ஆக இவ்விருக்கட்சிகளும், ஈழத்தமிழர்களுக்கு தீர்வாக முன்வைப்பது இலங்கை அரசின் விசாரணைக் கமிச­ன் முடிவுகளை இலங்கை அரசே
செயல்படுத்த வேண்டும் என்பதும், தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப்பிச்சை என்பதும்தான். ஈழத்தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசை
எதிர்த்து ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை இந்த நிலைமைகளில் கூட இக்கட்சிகள் ஆதரிக்கத் தயாரில்லை. இலங்கையின் இறையாண்மை
பேசி இந்தியாவின் துணை மேலாதிக்கத்திற்கு துணைப்போகின்ற கட்சிகளாகவே இக்கட்சிகள் திகழ்கின்றன.

தமிழீழமே தீர்வு

இராஜபட்சே கும்பல் போருக்குபின்பு கடந்த நான்கு ஆண்டுகளாக ஈழத்தமிழ்களுக்கு அரசியல் தீர்வுகாண மறுத்துவிட்டது. ஈழத்தமிழ் தேசிய இனத்தை அழிப்பதற்காக அதன் இன அழிப்புக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஈழப்பகுதி முழுவதும் இராணுவயமாக்கப்பட்டு வருகிறது. அரசியல், சிவில் நிர்வாகம் முழுவதும் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டு ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஈழ மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் வடக்கு கிழக்கை இணைத்து தமிழர் தாயகம் அமைப்பதைக் கூட இலங்கை அரசு ஒழித்து வருகிறது. அதாவது தமிழர்களின் பாரம்பரியமான பகுதிகள் சிங்களமயமாக்கபபட்டுவருகிறது. ஈழத்தமிழினத்தை அதன் சுவடு தெரியாமல் அழிக்கும் பணியை சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இராஜபட்சே கும்பல் இன அழிப்புப் போர்குற்றவாளிதான் என்பதை நிரூபித்துவிட்டது. அன்றாடம் வெளிவரும் தகவல்கள் அதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

எனவே இன அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சே கும்பல் மீது நடவடிக்கை கோரி சர்வதேச விசாரணை கோருவதும், ஈழத்தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் தனித்தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியாகும்.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கான வழிமுறைகள் கீழ்கண்டவாறு அமைய வேண்டும்.

 ஐ.நா. மன்றத்தின் பொது செயலாளர் பான்கிமூன் அமைத்த தாருசுமான் தலையிலான மூவர் குழு 2008-09ல் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் அவற்றின் மீது பன்னாட்டு புலனாய்வு மன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.  ஈழத்தில் நடந்த இனப்படுகொலைப் போரில் ஏற்பட்ட மனித அழிவுகளை தடுத்து நிறுத்த ஐ.நா. மன்ற பொதுசெயலாளர் பான்கிமூனும், விஜய் நம்பியாரும், ஜான் ஹோம்ஸ் போன்ற அதிகாரிகளும் தவறிவிட்டதை, ஐ.நா.வின் இன்னொரு அதிகாரியான சார்லஸ் பெற்றி  தயரித்த உள்ளக (internal) அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியன நடந்ததற்கான புதிய விசாரணை எதுவும் தேவையில்லை. அவர்கள் கண்டறிந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை விசாரணை மட்டுமே தேவை .

இந்த கோரிக்கைகளுக்காகப் போராடுவதன் கூடவே மிக முக்கிய உடனடிக் கோரிக்கைகளுக்காக போராடுவது மிகவும் அவசியமானதாகும்.

ஈழத்தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்;

உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை சொந்த
வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும்;

ஈழத்தில் ஒரு பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி ஈழத்தமிழர்கள் தங்களுக்கென ஒரு சுதந்திரமான தேசத்தை அமைத்து கொள்ளும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்;

உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும், இத்தகைய கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதுதான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

தமிழக- தமிழ் மக்களாகிய நாம் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளும், ரஷ்யா-சீனா ஏகாதிபத்திய அணியும் இலங்கை மீதான செல்வாக்கு மண்டலத்திற்கு போட்டிப் போட்டு ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதை எதிர்ப்பதோடு, இந்திய அரசின் இலங்கை மீதான துணை மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.

இந்திய அரசு தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்; விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்; இலங்கை அரசை இன அழிப்பு
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் அரசாக அறிவித்து இலங்கை அரசுடனான அரசியல்பொருளாதார உறவுகளைத் துண்டித்துக்கொள்ள
வேண்டும்; இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; இலங்கைத் தூதரகத்தை இந்தியாவிலிருந்து
வெளியேற்ற வேண்டும்; தமிழக மீனவர்களின் உரிமையை பதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில்
அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அரசியல் அகதிகளாக நடத்த வேண்டும் என்று இநதிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த
வேண்டும்.

இந்திய அரசின் விரிவாதிக்க கொள்கைகளையும், தேசிய இன ஒடுக்குமுறை கொள்கைகளையும் எதிர்த்துப் போராடி இந்திய அரசை தூக்கியெறிந்து ஒரு புதிய ஜனநாயக அரசை உருவாக்குதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழ் மக்களுக்கு நம்மால் உதவ முடியும்.

மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஐ.நா.தீர்மானத்தில் எந்த இடத்திலும் "இனப்படுகொலை'' என்ற வார்த்தையே இல்லை. இத்தீர்மானம் ஒரு
நாடகமே. இலங்கையில் சர்வதேச விசாரணையும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பும் நடத்த வேண்டும். அதற்கானத் தீர்மானத்தை இந்திய அரசே
முன்மொழிந்து கொண்டு வரவேண்டும். ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குள் இடம் பெறக்கூடாது. தமிழக அரசு நிறைவேற்றியத்
தீர்மானத்தை ஏற்று இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்திலிருந்து இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும்.
மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலாக்
கல்லூரி மாணவர்கள் துவங்கிய உண்ணாநிலை போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்கள் மத்தியில் விசுவரூபம் எடுத்து பெருகிவருகிறது.

அதே சமயம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் இலங்கை மீது
பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய கொள்கை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானித்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனை வலியுறுததி ஐ.நாவில் வாக்கெடுப்பு நடைபெறும் 21ஆம் தேதி 40 எம்பிக்களின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழக முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் செல்வாக்கின் காரணமாக அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது என்ற குழப்பம் மாணவர் மத்யில் இரு
வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. எனினும் மிகப்பெரும்பான்மையான மாணவர்கள் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வருகின்றனர்.

அமெரிக்கத்தீர்மானம் குறித்து மாணவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவினாலும் அடிப்படையில் இன அழிப்பு இராசபட்சே கும்பலை
கூண்டிலேற்ற வேண்டும் என்பதிலும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற கோரிக்கையிலும், மாணவர்கள்
ஒருமித்த கருத்துடனும், உறுதியுடனும் போராடிவருகின்றனர்.

வை.கோ., நெடுமாறன், தமிழ்த் தேசக் கட்சியைச் சார்ந்தவர்கள் இதுநாள் வரை அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவோடு தமிழீழம் பெற முடியும் என்று
நம்பிவந்தனர். ஆனால் அமெரிக்காவின் துரோகத்திற்குப் பிறகு, மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு அவர்களது நிலையில் ஒரு மாற்றம் தெரிகிறது.

மே 17 இயக்கம் அண்மையில் நடத்தியக் கூட்டத்தில் அவர்கள் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்துள்ளனர். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
எதிர்த்தும் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும், தேசிய ஒடுக்குமுறை கொள்கைகளை எதிர்த்தும் ஊசலாட்டமின்றி தமிழ் மக்களின்
கோரிக்கைக்கு வலுசேர்ப்பாகள் என்று தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.

எனவே, கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் தமிழ் உணர்வாளர்களும், புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் மாணவர்களின் போராட்டத்தை
ஆதரிப்பதோடு ஈழத்தமிழருக்கு ஆதரவான ஒரு பொது இயக்கத்தை கட்டியமைக்க ஒன்றுபடுவோம்.

* இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!

* அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் – மேலாதிக்கம் நோக்கம் கொண்டதே, இராஜபட்சேவை கூண்டிலேற்றவும் அல்ல, ஈழத்தமிழர்களின்
விடுதலைக்கானதும் அல்ல!

* இலங்கையை – அமெரிக்கா, சீனா மேலாதிக்கவாதிகளின் போட்டிக்களமாக மாற்றுவதை அனுமதியோம்!

* சோனியா, மன்மோகன் ஆட்சி – இன அழிப்பைத் தொடரும் இராஜபட்சேவின் கூட்டாளியே! போர்க்குற்றவாளிகளே!

* கருணாநிதியின் டெசோ - அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தர இந்தியாவை நிர்ப்பந்திப்பது – தமிழின துரோகத்தின் தொடர்ச்சியே!

* இரட்டை வேட ஜெயா அரசே! மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை கைவிடு!

* தமிழீழத்திற்கான மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மார்ச் 2013