Wednesday 6 February 2013

இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!



இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒரு சாதிவெறித் தாக்குதலை நடத்தினர்.

முன்னூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்தினர். வன்னிய சாதியைச் சார்ந்த ஒரு பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை
காதலித்து கலப்புமணம் புரிந்துகொண்டதைக் காரணம் காட்டி இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.

கடந்த(2012) நவம்பர் 7ல், தருமபுரியில் நடந்த அந்தக் கலவரம் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை வன்னிய சாதிவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நட்த்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாசு தாழ்த்தப்பட்டசாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்துகிறார்.

“அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணி” எதிர்ப்புரட்சிகர முன்னணியே!

இராமதாசு தலைமையில் கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், முக்குலத்தோர் சாதி அமைப்புகள் உள்ளிட்ட 51 சாதி அமைப்புகள் ஒன்று கூடி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணி” என்ற ஒரு சாதிவெறி முன்னணியை உருவாக்கியுள்ளனர். நாடகக் காதல் எதிர்ப்பு என்ற பேரில் காதல் மணம், கலப்பு மணத்தை தடுத்து நிறுத்துவதற்கு பெற்றோரின் சம்மதத்துடன்தான் திருமணம் என்று திருமணச் சட்டத்தைத் திருத்தவேண்டும்’ வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிற சாதியினரை பழிவாங்கத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறி அச்சட்டத்தைத் திருத்த வேண்டும்; தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தனித் தொகுதிகளுக்கான இடஒதுக்கீடுகளை இரத்து செய்ய வேண்டும் என்று அந்த முன்னணி தீர்மானம் போட்டுள்ளது. அத்துடன் கொங்குவேளாளப் பேரவையின் தலைவர் மணிகண்டனோ தங்களின் சாதி கௌரவத்தைப் பாதுகாக்க பெண்கள் காதல் மணம் புரிவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கக்கூடிய சட்டத்தையும் திருத்தவேண்டும் என்று கூறினார்.

இராமதாசு தலைமையிலான சாதிவெறி முன்னணி மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் தீர்மானம்
நிறைவேற்றியதன் மூலம், அது ஒரு எதிர்புரட்சிகர பிற்போக்கு முன்னணி என்பதை நிரூபித்துவிட்டது. இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களும், ஜனநாயக
சக்திகளும் போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள், பெண்ணுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்கு இந்த பிற்போக்கு
எதிர்ப்புரட்சிகர கும்பல் முயற்சிக்கிறது.

இது நாள்வரை தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் பேசி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளான ஒடுக்கப்பட்ட சாதிகளின்
“சமூகநீதி”, “பார்ப்பனிய எதிர்ப்பு”, “தீண்டாமை ஒழிப்பு” என்ற சாதிய சீர்திருத்தத்திற்கான இயக்கங்கள்தான் கட்டியமைக்கப்பட்டன. ஆனால்
வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதுதான் ஒடுக்கப்பட்ட சாதியான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒடுக்கும் சாதிகளின் முன்னணி
உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பேசியவர்கள் இன்று சமூக சீரழிவாளர்களாக, எதிர்புரட்சிகர சக்திகளாக உருவெடுத்துள்ளனர். “குடிதாங்கி”, “அம்பேத்கார் சுடர்” என தலித் அமைப்புகளால் பட்டம் சூட்டப்பட்ட இராமதாசு இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தும் கொள்ளிக்கட்டையாக மாறியுள்ளார். இராமதாசு கும்பலின் தலைமையிலான இந்த எதிர்ப்புரட்சிகர சாதிவெறி கும்பல் தமிழகத்தை காட்டுமிராண்டிக் காலத்திற்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறது.

சாதிக்கலவரங்களுக்கான காரணம் என்ன?

பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடரும் சாதிக்கலவரங்கள் நடத்துவதற்கும், இராமதாசு தலைமையில் ஒரு சாதிவெறி முன்னணியை உருவாக்குவதற்கும் இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டி கலவரத்தில் ஈடுபடுவதன் மூலம் சாதிய வாக்கு வங்கியைஉருவாக்குவது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கான தயாரிப்பு செய்வது.

இரண்டு, சாதி தீண்டாமை வன்கொடுமைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிப்பதன் மூலம் அவர்களை மீண்டும் பண்ணையடிமை முறைக்குள் அடக்கிவைப்பதற்கான முயற்சி.

சாதிவெறியர்களின் தேர்தல் செயல்தந்திரத்தை முறியடிப்போம்!

பா.ம.க நிறுவனர் இராமதாசுவின், தலித் அமைப்புகளோடு உறவுகொண்டு சமூகநீதி பேசி, தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளுடன் கொள்கையற்ற முறையில் மாறி, மாறி கூட்டணி அமைத்து பதவி சுகம் காண்பது என்ற சந்தர்ப்பவாத அரசியலை, வன்னிய சாதி மக்களே
வெறுத்தனர். அதனால் பா.ம.க 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது. பா.ம.க
அரசியலில் செல்லாக் காசாகியது. சீண்டுவாரின்றி தனிமைப்பட்டது. எனவேதான் இராமதாசு தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளுடன் இனிஎந்நாளும் கூட்டணி கிடையாது. இனி சாதிவாதக் கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து சாதிய
முன்னணி என்ற ஒரு சாதிவெறிப் பாசிச முன்னணியை அமைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிக்கலவரங்களை நடத்தி பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குவங்கியை உருவாக்குவதன் மூலம், வரும்நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த சாதிவெறி அமைப்பின்
திட்டமாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அணியில் வலிமையை சோதிப்பது, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளையாவது கைப்பற்றவேண்டும் என்பது இலக்காகும். அதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டாக வேண்டும் என்பதே இராமதாசின் இலட்சியமாகும்.

வட மாநிலங்களைப் போல இந்த சாதிவெறி கும்பலே தனித்து ஆட்சி அமைக்க விரும்புகின்றன. அவ்வாறு இந்தக் கும்பல் ஆட்சிக்கே வந்தாலும்,
அல்லது தமிழக அரசியலைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு பலம் பெற்றாலும் அது தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் கேட்டையே விளைவிக்கும்.  சாதிவாத அமைப்புகள் அனைத்தும் மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவருவதையும், உலகமய தாராள மயக் கொள்கைகளை செயல்படுத்தி முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்தும், துரோகத்திற்குத் துணைபோகின்ற அமைப்புகளாகவே உள்ளன. அண்மையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய பிறபடுத்தப்பட்ட சாதியின் தலைவர் முலாயம்சிங் யாதவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மாயாவதியும் மன்மோகன் கும்பலின் துரோக ஆட்சியை காப்பாற்றி நாட்டுமக்களுக்குத் துரோகம் இழைத்தனர். எனவே அரசியலில் எழுச்சி பெறும் இந்த சாதிவெறிச் சக்திகள்  புதியகாலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்து மக்களை சாதிரீதியாக பிரித்தாள்வதற்குத் துணைபோவர். சாதிக் கலவரங்களால் நாட்டில் இரத்த ஆறு ஓடும். அனைத்து சாதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாசமாக்கப்படும். இராமதாசு தலைமையிலான சாதிவெறி முன்னணியை தேர்தலில் தோற்கடிப்பதுதான் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாகும். எனவே அனைத்து சாதி உழைக்கும் மக்களும் சாதிவெறியைத் தூண்டும் வாக்குவங்கி தேர்தல் செயல்தந்திரங்களை தோற்கடிக்க ஓரணியில் திரளவேண்டும்.

சாதித் தீண்டாமை வன்கொடுமையை எதிர்ப்போம்!

அடுத்து இராமதாஸ் கும்பலின் தலைமையிலான சாதிவெறி முன்னணியினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகவும் பிற்படுத்தப்பட்ட
சாதியினர் மத்தியில் சாதிவெறியைத் தூண்டி சாதிக் கலவரங்களை நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பண்ணையடிமை ஆதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கின்றர்.

நாடகக் காதலை எதிர்ப்பது எனும்பேரில் காதல் திருமணத்தையும், கலப்புத் திருமணத்தையும் தடுப்பதற்காக திருமண வயதை பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 என்று வரையறை செய்ய வேண்டும். அந்த வயதிற்குள் திருமணம் என்றால் பெற்றோரின் அனுமதியுடன்தான் திருமணம் என்று சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது எனினும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பிற உயர் சாதியினருக்கு எதிராக பயன்படுத்துவதைத் தடுக்க அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் பொருளாதார அடிப்படையில் மிகவும் முன்னேறி விட்டார்கள் எனவே அவர்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்யவேண்டும் என்றும்; குறிப்பாக சட்டமன்ற நாடாளுமன்றத் தனித் தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து அனைத்து மக்களிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெற்றோருடைய அனுமதியுடன்தான் திருமணம் என்று திருமணச் சட்டத்தத்தைத் திருத்தவேண்டும் என்று கூறுவதன் மூலம் வயது வந்த
ஆணும் பெண்ணும் காதலித்து தங்களுக்கானத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கின்றனர். சுதந்திரத் திருமணங்களை ஒழித்து
– கட்டாயத் திருமணங்களை நடத்தவேண்டும் என்றும், ஒரே சாதிக்குள்ளேயே  திருமணம் என்ற அகமணமுறையிலான நிலப்பிரபுத்துவ பிற்போக்கு
சாதிமுறையை பாதுகாக்கவும் விரும்புகின்றனர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் உயர்சாதி பணக்காரப் பெண்களை திருமணம்  செய்துகொண்டு பின்னர் அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர் என்று கூரி பிற்படுத்தப்பட்ட சாதி இளைஞர்களுக்கு சாதிவெறியைத் தூண்டுகின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் திருமணம் பெற்றோர்களால் நடத்தப்படும் கட்டாயத் திருமணங்களில்தான் என்பதையும், வரதட்சனை கொடுமையால் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்கள் தற்கொலைப் புரிந்து மாண்டுபோவதும் இந்த சுதந்திரத் திருமணங்களை மறுப்பதுடன் பெண்ணுக்கு சொத்துரிமையும் போன்ற பெண்ணடிமைத் தனத்தைத் திணிக்கின்றனர். அத்துடன் காதல்மணத்தை எதிர்ப்பது என்பது பிற்படுத்தப்பட்ட சாதிக்குள்ளேயே ஏழை பணக்காரர்களுக்கிடையே ஏற்படும் காதலையும் மறுத்து ஆளும்வர்க்க நலன்களை பாதுகாக்கின்றனர்.

தமிழகத்தில் சாதித் தீண்டாமை ஒழிந்துவிட்டதாம். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறிவிட்டார்களாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உயர்சாதியினரை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறதாம். இப்படியெல்லாம் கூறி பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் துண்டுகின்றனர்.

தமிழகத்திலோ அல்லது இந்திய அளவிலோ இன்னமும் சாதி தீண்டாமை ஒழியவில்லை. இன்னமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டகிராமங்களில் தேனீர்க்கடைகளில் தனிக்குவளைமுறை நடைமுறையில் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழையத்தடை, பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கத்தடை, உயர்சாதியினரின் தெருவில் செருப்புப் போட்டு நடக்கத்தடை, சுடுகாட்டுப் பாதை மறுப்பு என தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டனர் என்பதும் பொய்யேயாகும். உண்மையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு சலுகைகள் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினர் 10 சதவீதம் பேர்தான் பலனைடைந்துள்ளனர். 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் தத்தளித்துக்கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களின் ஒதுக்கீடும் கூட மிகக் குறைவானதே. அத்துடன் பல உள்ளாட்சிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரை சரிசமமாக நடத்தவும் சாதிவெறியர்கள் மறுக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு சிறுபிரிவு முன்னேற்றத்தைக் கூட இந்த சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே கல்வி, வேலைவாய்ப்பு, தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீட்டை ஒழிப்பது என்ற கோரிக்கை அவர்களின் பங்கை தட்டிப் பறித்துக்கொள்ளும் தந்திரமேயாகும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை திருத்தக் கோருவதன் மூலம் சாதித் தீண்டாமை கொடுமைகளை செயற்படுத்தவும், சேரிகளைக் கொழுத்தவும், சாதிகடந்து கலப்புத் திருமணங்கள் செய்வோரை

கவுரவக் கொலைகள் புரிவதற்கும் இந்த சாதிவெறிச் சண்டாளர்கள் உரிமை கோருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும், ஜனநாயக சக்திகளும் போராடிப்
பெற்ற அணுகுமுறை ஜனநாயக உரிமைகளையும் பறித்து கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு எனத் தமிழகத்தைக் காட்டுமிராண்டிக் காலத்திற்கு பின்னோக்கி இழுக்கின்றனர் இந்த சாதி  வெறியர்கள்.

சாதிவெறி முன்னணிக்கு எதிரான மக்கள் முன்னணியை உருவாக்குவோம்!

இராமதாசு கும்பலின் தலைமையிலான சாதிவெறி முன்னணியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டி வாக்குவங்கி உருவாக்குவதற்கான தேர்தல் செயல்தந்திரங்களையும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதித் தீண்டாமையைத் திணித்து பண்ணையடிமைஆதிக்கத்தையும் நிலைநிறுத்த சாதிக் கலவரங்கள் நடத்துவதற்கான செயல்தந்திரங்களை எதிர்த்தும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கவேண்டும். சாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்துவதற்காக – எதிர்ப்புரட்சிகர
வன்முறையை புரட்சிகர வன்முறையால் எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு கிராமத்திலும் தற்காப்புக் குழுக்களை அமைத்து செயற் படவேண்டும்.

சாதிவெறியர்களை எதிர்த்த நடவடிக்கையோடு மட்டும் இத்தகைய மக்கள் முன்னணி( தன் பணிகளைக்) குறுக்கிக் கொள்ளக்கூடாது. இத்தகைய முன்னணி சாதிவெறியர்களின் செயல்தந்திரங்களுக்கு நேர்படித்தான கோரிக்கைகளை முன்னெடுத்துப் போராடவேண்டும்.

 * நிலப்பிரபுத்துவ சாதிமுறையிலானஏற்பாட்டுத் திருமணங்களை எதிர்த்து சுதந்திர திருமணங்களை ஆதரித்தும்,

* ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு சொத்துரிமை உள்ளிட்ட சமத்துவ
உரிமைகளுக்காகவும்,

* தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி உள்ளிட்ட இடஒதுக்கீட்டை ஆதரித்தும்,

* தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீதான சாதித் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும்,

* வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பொது உரிமை, மத உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கவும்,

கழகக் கொடி
 அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கவேண்டும்.

மேற்கண்ட சாதித் தீண்டாமையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான கோரிக்கைகளை  உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்றும் போதுதான் முழுமையாக செயல்படுத்த முடியும். அரசியல் அதிகாரம் எனபது நிலவுகின்ற அரசு அமைப்பில் பங்கேற்பது அல்ல. இந்திய
அரசமைப்பு முறை நிலப்பிரபுத்துவத்தையும், அதன் சாதிமுறைகளையும்  பாதுகாக்கின்ற தரகுமுதலாளித்துவ, பெரு நிலப் பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்தியங்களின் கூட்டு சர்வாதிகார அரசாகும். எனவே இந்தப் பிற்போக்கு வர்க்கங்களின் நலன்காக்கும் இந்திய அரசை புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் தூக்கியெறிந்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவும்போது மட்டுமே பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். அப்போதுதான் சாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டி, அனைத்து ஜனநாயகக் கடமைகளையும் நிறைவேற்ற முடியும்.

எனவேதான் சாதித் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும், பெண்ணினத்தின் சமத்துவத்தை நிலைநாட்டிடவும், இராமதாசு கும்பலின் சாதிவெறிக் கலவரங்களை எதிர்த்தும் கீழ்க்கண்ட முழக்கங்களின்
அடிப்படையில் அணிதிரளுமாறு அனைத்து சாதி உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!

கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என 
தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!


சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!


சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!


ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
பிப்ரவரி 2013