Wednesday 25 September 2013

அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!


அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!

      மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.

      இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத் திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நெருக்கடிக்கு தோள்கொடுக்கும் மன்மோகன் கும்பல்!

      அதிகரித்துக்கொண்டே செல்லும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், வரலாறு காணாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்தவும் அந்நிய முதலீட்டை முழுதுமாக அனுமதிப்பதுதான் ஒரே வழி என்று மன்மோகன் கும்பல் வாதிடுகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு செயல்படுத்திவரும் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி, அந்நிய முதலீட்டை படிப்படியாக அனுமதித்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்பதை அது மூடிமறைக்கிறது. அந்நிய மூலதனம் புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் ஒன்றுதான் என்பதை மூன்றாம் உலக நாடுகளின் அனுபவம் காட்டுகிறது. மன்மோகன் கும்பலோ அனுபவத்திலிருந்து பாடம் கற்க மறுத்து அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிடுகிறது.

      இன்று உலகம் முழுவதும் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடி தொடருகின்ற சூழலில், மன்மோகன் கும்பல் கூறுவது போல அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்குள் வருமா? அது உற்பத்தித் துறையில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்குமா என்பது பற்றிப் பரிசீலிப்போம்.

      அமெரிக்காவில் 2008ல் உருவான நிதிநெருக்கடி ஐரோப்பிய யூனியன், ஜப்பான் என்று உலகம் முழுவதும் பரவி, மீள்வதற்கு வழிதெரியாமல் பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. அண்மையில் ஐ.எம்.எப். (IMF)
வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரம் பற்றிய ஆய்வறிக்கை உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தி 3.1 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று அபாயச் சங்கு ஊதியுள்ளது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தி 1.6 சதவீதமாகவும், 17 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பின் வளர்ச்சி 0.6 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந் துள்ளது. அமெரிக்காவின் வேலையின்மை 8 சதவீதமாகவும், வயது வந்தோர் 5ல் 4பேர் ஏழ்மையில் உழல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் “டெட்ராய்ட்” தொழில்  நகரமே திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது.

      இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிற இந்த நெருக்கடி ஒரு மிகு உற்பத்தி நெருக்கடியாகும். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திலும் உற்பத்தி வீழ்ச்சி, வேலையின்மை பெருக்கம், ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.

செல்வம் குவிவதும் வறுமை பெருகுவதுமான ஏற்றத்தாழ்வுகள் பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. எனவே பொருட்கள் வாங்குவாரின்றி தேங்கிக்கிடக்கின்றன.

இத்தகைய சூழலில் அந்நிய முதலீடுகள் இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில்களை தொடங்குவதற்கு வரவில்லை. மாறாக அந்நாடுகளில் திவாலான கம்பெனிகள் இந்தியாவில் இருக்கிற தொழில்களை விழுங்குவதற்கே வருகின்றன.

அதனால்தான் இந்தியாவைத் திறந்துவிட நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்க அரசாங்கத்தை அந்நாட்டு முதலாளிகள் நெருக்குகின்றனர்.

      2010ஆம் ஆண்டு புது தில்லியில் கூடிய இருநாட்டு நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்காவின் முதலீட்டிற்கான தடைகளை இந்தியா முழுவதுமாக அகற்றவேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியது.

நிதித்துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்குமாறு நிர்ப்பந்தித்தது. சென்ற மாதம் அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலர் ஜான்கெர்ரி மற்றும் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகையின் போதும் வர்த்தகம், சந்தை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் அணுமின் துறைகள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்தித்தது.

அதாவது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு எனும் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்களது மூலதன ஏற்றுமதிக்கும், சந்தையை தங்களது கட்டுக்குள் கொண்டுவரவும், நாட்டின் இயற்கை மற்றும் கனிமவளங்களை சூறையாடவும், அமெரிக்கா இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் செலுத்திவருகிறது. இந்தியாவின் மீது தனது புதிய காலனியாதிக்கத்தைத் திணிக்கிறது.

      அமெரிக்க அடிவருடி மன்மோகனோ அமெரிக்காவின் நெருக்கடிக்கு தோள்கொடுப்போம் என்று மானவெட்கமின்றி கூறுகிறார். நிதி அமைச்சர் சிதம்பரமோ அமெரிக்க முதலாளிகளுக்கு இந்தியாவை கொள்ளையிட 100 சதவீதம் பாதுகாப்பு வழங்குவோம் என்று அமெரிக்காவுக்கே சென்று உத்தரவாதமளித்து வருந்தி வருந்தி அழைக்கிறார். இந்தப் புதியகாலனிய தாசர்கள், அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்கவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதால் பெரும் ஆபத்து உருவாகிவருகிறது. மேகங்களின் பெருவெடிப்பால் உத்தராஞ்சல் மாநிலம் பேரழிவுகளை சந்தித்தது போல இந்திய நாடு பேரழிவுகளை சந்திப்பதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் பேராபத்தை உருவாக்கிவருகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

      இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அலுவலக இரகசியங்களுக்கு மிகவும் இன்றியமையாத துறைகள் தொலைத்தொடர்புத்துறை மற்றும் இராணுவத் தளவாடத் துறைகள் ஆகும். ஆனால் இந்த இரண்டு துறைகளிலும் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தை உருவாக்கியுள்ளது மன்மோகன் கும்பல். ஏற்கெனவே இணையதளங்கள் மூலம் அமெரிக்கா இந்தியாவை உளவுபார்க்கிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் 150 இடங்களில் 700 இரகசிய சர்வர்களை நிறுவியுள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையை அந்நிய மூலதனத்திற்கு 100 சதவீதம் அனுமதிப்பது நாட்டின் இரகசியம் முழுவதும் அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிடும். அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தைக் கொண்டுவரும்.

      தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். போன்ற நிறுவனங்கள் அழிக்கப்பட்டு இனி இத்துறையில்
ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கும். இத்துறையில் இலாபமாக பல லட்சங்கோடிகளை சுருட்டிக்கொள்ளும். 2006-07ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல் இரண்டு நிறுவனங்களும் அரசுக்கு 10,000 கோடி இலாபமீட்டித் தந்தன. ஆனால் இத்துறையில் 74 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்தப் பிறகு இன்று மொத்தம் ரூ. 2,50,000 கோடி நட்டம் என இந்நிறுவனங்கள் கணக்குக் காட்டுகின்றன. இத்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகள் லாபமீட்டும்போது, அரசுத்துறை நிறுவனம் மட்டும் எப்படி நட்டத்தில் இயங்குகின்றன? நட்டத்தைக் காட்டி மூடுவிழா நடத்திடத் திட்டமா? அந்நியர்களிடம் ஒப்படைப்பதற்கான சதியா? அவ்வாறு இந்நிறுவனங்கள் மூடப்படுமானால் அவைகளில் பணிபுரியும் 2.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையும் அதோகதிதான்.

      பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சார்ந்த தரகுப் பெருமுதலாளித்துவக் கம்பெனிகளும் பாதிக்கப்படும். தொலைத்தொடர்புத் துறையில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டுவந்த வோடோபோன், யூனினார் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இனி தனித்தே களமிறங்கும். அவைகளுடன் போட்டிபோட முடியாமல் டாட்டா, ரிலையன்ஸ் போன்ற தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் விரட்டியடிக்கப்படும். தொலைத்தொடர்புத் துறை முழுவதும் அந்நியர்களின் வசம் சென்றுவிடும்.

      பாதுகாப்புத் துறையில் இராணுவத் தளவாட உற்பத்தியில் 29 சதவீதமும், சில பிரிவுகளில் 100 சதவீதமும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டிற்குள் பாதுகாப்புத் துறையைக் கொண்டு செல்வதேயாகும். ஏற்கனவெ அமெரிக்காவுடனான அணுசக்தி-இராணுவ ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இராணுவம் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான யுத்த தந்திரங்களுக்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி இராணுவமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது போர்க் கருவிகள், நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உரிமையையும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதால் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு இந்தியா அமெரிக்காவின் புதிய காலனியாக முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கக் கம்பெனிகளின் வருகையால் இத்துறையில் வேலை செய்யும் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுரிமையும் பறிபோய்விடும். ஆனால் பாதுகாப்புத் துறையில் புதிய முதலீடுகளும், புதிய தொழில்நுட்பங்களும் அந்நிய முதலீடுகளால்
கொண்டுவரப்படும் என்றும், வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யலாம் என்றும் ‘சுதேசி’ நாடகம் ஆடுகிறார்கள். ஆயுதபேர ஊழலை தடுக்கலாம்
என்றும் கூறுகின்றனர். உண்மையில் திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்துவிட்டார்கள்.

காப்பீட்டுத்துறை கபளீகரம்

      காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அமெரிக்காவின் திவாலாகிப்போன நிதிநிறுவனங்களின் கோரப்பசிக்கு இந்தியாவின் காப்பீட்டுத் துறையை பலியிடுவதாகும்.

இந்திய நாட்டின் நிதி வளத்தை சூறையாடுவதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு வாசலை திறந்துவிடுவதாகும். அமெரிக்க நாட்டு மக்களையே ஏமாற்றி சூறையாடிய அந்த நிறுவனங்கள் இந்திய நாட்டு மக்களின் சேமிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.சி.யை விழுங்கிவிடும். இந்திய அரசுத் துறையில் ரூ. 5 கோடியில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், இன்று ரூ. 12 லட்சம் கோடி அளவிற்கு ஆலமரம் போல் தழைத்து
வளர்ந்துள்ளது.

      எல்.ஐ.சி. நிறுவனம் அரசாங்கத்திற்கு ஏராளமான இலாபத்தை ஈட்டித்தருகிறது. எல்.ஐ.சி.யானது கல்வி, தொழில், சுகாதாரம், குடிநீர், சாலைகள் அமைத்தல் போன்ற திட்டப்பணிகளுக்கும், சமூக நலப்
பணிகளுக்கும் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகிறது. இவ்வாறு அரசாங்கத்திற்கு அட்சயப் பாத்திரமாகவும், நாட்டு மக்களுக்கு அமுத சுரபியாகவும் சேவை செய்யும் பொதுத்துறை நிதிநிறுவனத்தை
அந்நியர்களுக்கு தாரைவார்ப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களை நடுத்தெருவில் நிறுத்துவதாகும்.

பொதுத்துறைகள் விற்பனை

      மன்மோகன் கும்பல் வரவு செலவுத் திட்டத்தில் நிதிப்பற்றாக் குறையை ஈடுகட்டுவது என்ற பேரில், இலாபத்தில் இயங்கிவரும் அரசாங்கத்திற்கு வருமானத்தை அள்ளி வழங்கும் “நவரத்னா” என்றழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கிறது. என்.எல்.சி., பி.எச்.இ.எல்., கோல் இந்தியா, ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை - அரசு - தனியார் பங்கேற்புத் திட்டத்தின் கீழ் (Public Private Participation)  அடிமாட்டு விலைக்கு
விற்றுவருகிறது. சென்ற நிதியாண்டில் ரூ.32,000 கோடிக்கு விற்பது என்ற முடிவை இவ்வாண்டு ரூ. 53,000 கோடியாக உயர்த்தியுள்ளனர்.

      மின் உற்பத்தி, நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற துறைகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக அரசு வாங்கிவிட்டதால் அந்த நிறுவனம்

பாதுகாக்கப்பட்டு விட்டதாக நினைப்பது தவறு. என்.எல்.சி. உள்ளிட்ட மின் திட்டங்களில் தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அரசுத் துறை மூலம் 33,000 மெகாவாட்
மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தனியார்துறையிலோ 42,000 மெகாவாட் தயாரிக்கப் போகிறார்கள். இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மலிவான விலைக்கு விற்று பன்னாட்டுக்
கம்பெனிகளின் வேட்டைக்கு இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் திறந்துவிட்டுள்ளது மன்மோகன் கும்பல்.

வேளாண்மைத் துறையில் அந்நிய ஆதிக்கம்

      மன்மோகன் கும்பல் இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பேரில் வேளாண்மைத் துறையைப் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ குழும விவசாயத்துக்கு (Corporate Agriculture) கதவைத் திறந்துவிட்டுள்ளது.      நிலச் சீர்த்திருத்தச் சட்டங்களை செல்லாக் காசாக்கிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக்குவியலுக்கு வழிவகுத் துள்ளது. அரசு, தனியார்துறை பங்கேற்பு (PPP) திட்டத்தின் மூலம் ஒப்பந்த விவசாய முறையை திணிப்பது, வேளாண் பொருட்களின் சந்தைக்கான 65ஆம் ஆண்டுச் சட்டத்தை திருத்தி தனியாரை அனுமதிப்பது, காப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வணிகம் அனைத்திலும் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதிக்கிறது. ஒப்பந்தமுறை விவசாயத்தின் மூலம் சிறு நடுத்தர விவசயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு
நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர். ஏற்கெனவே 26 சதவீதம் பேர் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பெருகுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை பெருகுகிறது.

      இந்தியாவின் 17 மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளாண்மைத் துறையில் நுழைந்துள்ளன. கார்கில், மான்சாண்டோ, வால்மார்ட் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளும்,
ரிலையன்ஸ், டாட்டா கெமிக்கல், எஸ்ஸார், அடானி, ஐ.டி.சி, கோத்ரேஜ் போன்ற இந்திய கார்ப்பரேட்டுகள் வேளாண்மைத் துறையில் ஆக்கிரமித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் புகையிலை, சூரியகாந்தி, காய்கனிகள், பால் பொருட்கள், கால்நடைகள், கோழிப் பண்ணை, மீன்பிடிப்பு போன்ற பணப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் உணவுத் தானிய உற்பத்தி வீழ்ச்சியைடந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர். ஒப்பந்த விவசாயம் என்றாலே “இலாபம் கார்ப்பரேட்டுகளுக்கு, நட்டம் விவசாயிகளுக்கு” என விவசாயம் நலிவடைந்து வருகின்றது.

விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

      ஏற்கனவே உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தின் ஆணைகளை ஏற்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய வேளாண்மைச் சந்தையை திறந்துவிட்டதால் இந்திய விவசாயிகள் போட்டிபோட முடியாமல்
தவிக்கிறார்கள். இந்திய விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிவந்த மானியத்தை வெட்டுவது, அரசு கடன் குறைப்பது போன்ற நடவடிக்கை களால் விவசாய இடுபொருட்களின் விளைபொருட்களின் விலை
உயர்ந்து போகிறது. மறுபுறம் ஏகாதிபத்திய நாடுகளில் மானியம் பெற்று, மலிவான விலையில் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிப்பதற்கானத் தடைகளும், கட்டுப்பாடுகளும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
அகற்றப்பட்டுவிட்டது. இதன் விளைவாக விளைப்பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. எனவே இந்திய விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நட்டம் அடைகின்றனர். விவசாயிகளின் கடன் தொல்லை
அதிகரித்து தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது நாடு முழுவதும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலையால் மாண்டுவிட்டனர், தற்கொலைகள் தொடர்கின்றன.

 மேலும் தற்போது மன்மோகன் கும்பல் தேசிய நதிநீர்க் கொள்கையை அறிவித்து ஆறு, குளங்கள் அனைத்தையும் அந்நியர்களிடம் ஒப்படைக்கிறது. குடிநீருடன், பாசனத்துக்கான நீரையும் இனி விவசாயிகள் விலைகொடுத்து வாங்கவேண்டும். இதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு சமாதிகட்டும் வேலையை தொடங்கிவிட்டது. மன்மோகன் கும்பல் செயல்படுத்திவரும் புதிய காலனிய வேளாண் கொள்கை விவசாயிகளுக்கு கொடுத்தப் பரிசு இதுதான்.

      சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து மன்மோகன் கும்பல் வணிகர்களின் வாழ்வையும் சீரழிக்கிறது. ஏற்கனவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதிக்கும்
போது விதிக்கப்பட்டிருந்தக் கட்டுப்பாடுகளையும் தற்போது அகற்றிவிட்டது. இந்நிறுவனங்கள் 30 சதவீதம் பொருட்களை இந்தியாவில் கொள்முதல் செய்யவேண்டும், மொத்த முதலீட்டில் 30 சதவீதம் கட்டமைப்பு
வசதிகளில் முதலீடு செய்யவேண்டும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மட்டுமே திறக்கவேண்டும் என்றக் கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டது. இதன் மூலம் உள்நாட்டு
விவசாயிகளுக்கும், சிறுதொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு என்று சொன்னதும் அகற்றப்பட்டுவிட்டது. அந்நியர்களுக்கு கதவு அகலத் திறந்துவிடப்பட்டுவிட்டது. எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய
கம்பெனிகளின் வருகையால் 4 கோடி வணிகக் குடும்பங்கள் வாழ்வுரிமை இழப்பது மட்டுமின்றி, கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறுதொழில் புரிவோரின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இனி விவசாயிகளைப் போலவே வணிகர்கள், சிறு முதலாளிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களும் காவுகொடுக்கப்படுகிறது

      சாமான்ய மக்களின் ஆட்சி என்று பதவிக்கு வந்த சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சி சாமன்ய மக்களின் முதுகெலும்பை உடைக்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்று கூறி பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற பொருட்களின் விலைகளையும் அத்யாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தி சாமன்ய மக்கள் மீது நெருக்கடியின் சுமைகளை சுமத்துகிறது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றத் துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி நடுத்தர மற்றும் ஏழைகள் மீது சுமைகளை மென்மேலும் திணிக்கிறது. மறுபுறம் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளி களுக்கும் நட்ட ஈடு, ஊக்கத்தொகை என்று ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது.

      உங்கள் பணம் உங்கள் கையில் என்று கூறிக்கொண்டே நியாய விலைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கிறது. ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி உச்சரித்துக்கொண்டே, ஏழைகளின்
எண்ணிக்கையை குறைக்கும் வஞ்சகத்தை அரங்கேற்றுகிறது. ஒருவருடைய வருமானம் கிராமப்புறத்தில் 27.20 ஆகவும், நகர்புறத்தில் 33.30 ஆகவும் இருந்தால் அவன் பணக்காரன் என்றும், அவர்களுக்கு அரசின்
சலுகைகள் எதுவும் கிடைக்காது என்றும் திட்டக் கமிஷன் கூறுகிறது. தற்போது மத்திய அரசு கொண்டுவரும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகம் போன்ற மாநிலங்களில், அனைவருக்கும் நியாய விலைக்
கடைகளின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள் வழங்குவதைத் தடைசெய்கிறது. இதனால் தமிழகத்திற்கு 1 லட்சம் டன் உணவு தானியம் குறைக்கப்படும். அது ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

இவ்வாறு சாமான்ய மக்களின் ஆட்சி எனும் பேரில் “ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாய் ஏழைகளையே ஒழித்துவிடும்” திட்டத்தை மன்மோகன் சோனியா கும்பல் செயல்படுத்துகிறது.

      இவ்வாறு சோனியா, மன்மோகன் தலைமையிலான மத்திய ஐ.மு. கூட்டணி ஆட்சி அந்நிய முதலீட்டுக்கானத் தடைகளை முழுவதும் அகற்றி ஏகாதிபத்திய நெருக்கடியை நாட்டுமக்கள் மீது திணிப்பதும்,

நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாக மாற்றி நாட்டின் பாதுகாப்புக்கே உலைவைப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மன்மோகன் கும்பல் ஆட்சி நாட்டைக் காட்டிக்கொடுத்து ஊழல் புரிவதில் எட்டப்பக் கும்பலையும் விஞ்சிவிட்டது. ஊழலின் உலகமகா சக்கரவர்த்தியாக மன்மோகன் திகழ்கிறார். ஊழலால் பல லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்டப்பட்டு அயல் நாடுகளில் பதுக்கப் பட்டுள்ளது. அதனால் நாட்டின் கஜானா காலியாகிறது. புதிய காலனிய சேவைக்கு அவர்களுக்கோ பல லட்சம் கோடிகள் சன்மானங்கள். ஆனால் மக்களுக்கோ வறுமை, வேலையின்மை, பட்டினிச்சாவு மற்றும் தற்கொலைகள் பரிசாகக் கிடைக்கின்றன.

  மன்மோகன் கும்பலின் தேசத் துரோக ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்கள் மீதும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் மீதும் பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது மன்மோகன் கும்பல். 

அத்துடன் தனது மக்கள் விரோத செயல்களால் அம்பலப்பட்டுப்போய் உள்ள மன்மோகன் கும்பல் தெலுங்கானாவை உடைப்பதன் மூலம், மொழிவாரி அடிப்படையிலான பல மாநிலங்களை உடைப்பதன் மூலம்
மக்களைப் பிளவுப்படுத்தி தம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அத்துடன் மொழிவார் மாநிலங்களை உடைத்து சிறுசிறு மாநிலங்களாக பிரிப்பதன் முலம், ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்திற்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுகிறது. எனவே தேசத்துரோக, மக்கள் விரோத சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவது இந்திய மக்களின் உடனடித் தேவையாக மாறிவிட்டது.

      ஆனால் நாடாளுமன்றவாத எதிர்க்கட்சிகள் எதனிடமும் மன்மோகன் கும்பலுக்கு எதிரான மாற்றுக்கொள்கை இல்லை. அந்நிய முதலீட்டை நாட்டிற்குள் அனுமதிப்பதில் எந்த அளவுக்கு, எந்தெந்தத் துறையில்
என்பதில் மட்டும்தான் பா.ஜ.க. கருத்து மாறுபடுவதாகக் கூறுகிறது. உண்மையில் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதில் அது காங்கிரஸ் கட்சியுடன் போட்டிபோடுகிறது.

இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க போன்ற மாநில அளவிலான தரகுமுதலாளித்துவக் கட்சிகளிடமும் ஒரு மாற்றுக் கொள்கை இல்லை பொதுத்துறையை தனியார் மயமாவதை எதிர்த்தாலும் இக்கட்சிகள் எதுவும் அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்பதை ஏற்பதில்லை. மாறாக இக்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது அந்நிய முதலீட்டுக்கு ஆதரவளிக்கும்
கொள்கைகளையே செயல்படுத்துகின்றன.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் தொலைதொடர்புத்துறை, பாதுகாப்புத் துறைகளையும், நிதித்துறைகளையும் மன்மோகன் அந்நிய முதலீட்டிற்கு முழுவதுமாக திறந்துவிடுவதை எதிர்த்தும் பொதுத்துறைகளை தனியாரிடம் தாரைவார்ப்பதை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் மக்களும், தேசபக்த ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.

அதற்கு அனைவரும் ஒன்றுபடுவது உடனடி அவசியமாகும். மேலும் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக்கட்டி, அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி மற்றும் அரசியல் பொருளாதர ஒப்பந்தங்களை இரத்துச் செய்து நாட்டை முழுமையாக விடுதலை செய்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அனைத்து மக்களும் உணரவேண்டும்.

      எனவேதான் அந்நிய மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும், தேசபக்த ஜனநாயக சக்திகளும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில்
அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

தேசத் துரோக மன்மோகன் சோனியா அரசே!

*  அந்நிய முதலீட்டிற்கு அனைத்துத் துறைகளையும் திறந்துவிடும் திட்டங்களைத் திரும்பப் பெறு!

*   உலகமுதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை
இந்திய மக்கள் மீது சுமத்துவதை முறியடிப்போம்!

* அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!

*  மன்மோகன் சோனியா துரோக ஆட்சியைத் தூக்கியெறிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 201

Tuesday 24 September 2013

இந்திய அரசே, ஈழத் தமிழினத்தை ஒடுக்கும் மோசடிகளை மூடிமறைக்க, இராஜபட்சே கும்பல் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!



இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

சிங்கள இனவெறியன், இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல், இலங்கையில் போர்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்தப் பிறகும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண மறுத்துவருகிறது. ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போது திடீரென்று 13வது சட்டத்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, வடக்குமாகாணத் தேர்தலை நடத்தி ஜனநாயகம் வழங்குவது என்ற பேரில் ஈழத்தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறையை மூடி மறைப்பதுடன், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன்னை இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.

அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐ.நா. மனித உரிமை கமிஷ்னர் நவனீதம் பிள்ளை, தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பற்றியும்; போர் முடிந்தப் பிறகும் கூட அங்கு ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்படுவது குறித்தும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் பத்திரிக்கையாளர் உட்பட காணாமல் போவது தொடர்வது பற்றியும்; சிங்கள இனவெறி பாசிச ஆட்சியின் கொடூரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இதையெல்லாம் மூடிமறைத்து காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைக்கும் கபட நாடகங்களுக்குத் துணைபோகிறது.

13வது சட்டத்திருத்தம் ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தவே

1987ஆம் ஆண்டு போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

 ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கவும், இலங்கை மீது இந்தியாவின் மேலாதிக்கத்தைத் திணிக்கவும், போடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் போடப்பட்ட ஒப்பந்தம் அல்ல. தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்துப் போடப்பட்ட ஒப்பந்தமும் அல்ல. தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டு இலங்கை அரசிற்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும், இல்லையேல் இந்திய அமைதிப் படை நேரடியாகத் தலையிட்டு ஈழப் போராளிகளை ஒடுக்குவதற்குத்தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும், கிழக்கையும் தமிழர் தாயகம் என்று ஒரே இன மாகாணமாக இணைத்து, இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த மாநிலத்திற்கு அதிகாரம் வழங்குவது என்ற அம்சங்களை உடையது என்று புகழப்பட்டது. தமிழர் பகுதிக்கு சுயாட்சி வழங்குவது என்றும் கூறப்பட்டது.

ஆனால் இவ்வொப்பந்தம் வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை
இணைப்பதா வேண்டாமா என்பதை கிழக்குப் பகுதி மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறியதன் மூலம் தமிழர் தாயகம் என்பதை மறுத்துவிட்டது. இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ்
பேசும் மக்களைக் கொண்ட இருமாநிலங்கள் அமைப்பது என்று கூறினாலும் அனைத்து அதிகாரங்களும் சிங்கள மத்திய அரசிடமே குவிந்துள்ளதை எதிர்க்கவில்லை இவ்வொப்பந்தம். தமிழ் மாகாண அரசாங்கத்திற்கு வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) போடுவதற்கும் கூட அதிகாரம் கிடையாது.

அந்த மாகாண அரசாங்கத்தின் முதலமைச்சராக இருந்த, இந்திய அரசின் கைக்கூலியான வரதராஜப் பெருமாள் இந்தியப்படை வெளியேறியபோது மாநில அதிகாரம் பற்றிக் கூறியது: “நான் இந்த மாகாணத்தின் முதலமைச்சர். ஆனால் என் அலுவலகத்துக்கு ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்குக்கூட இலங்கை குடியரசுத் தலைவரின் இசைவையும், நிதியையும் பெறவேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

இராஜபட்சே கும்பல் அந்த 13வது சட்டத்திருத்தத்தையும் அப்படியே செயல்படுத்த முடியாது என்றும் அச்சட்டத்தை திருத்தப் போவதாகவும் கூறிவிட்டது. 2006-ஆம் ஆண்டே வடக்கையும், கிழக்கையும் இணைப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தமிழர் தாயகம் என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் சிங்களம், தமிழ் மாகாணம் என்று இரண்டு இன மாகாணம் என்பதையும் மறுத்து இலங்கையை எட்டு மாகாணங்களாகப் பிரித்ததன் மூலம் தமிழ் இனம் ஒரு இனம் என்பதையும் மறுத்துவிட்டது. மேலும் வடக்குப் பகுதி மாகாணத்திற்கு காவல் (பொலிஸ்), நிலம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு அதிகாரமும் வழங்க முடியாது என்றும், அவ்வாறு அதிகாரம் வழங்குவது தேசப்பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று கோத்தப்பய இராஜபட்சே அறிவித்துள்ளான்.

இவ்வாறு இராஜபட்சே கும்பல் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தையும் நீர்த்துப் போகச்செய்து ஈழத்தமிழர்கள் மீது இன ஒடுக்குமுறையை தொடர்கிறது.

1987ல் விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது சிங்கள இன வெறியர்கள் சில்லறை திருத்தங்களை ஏற்றுக்கொண்டனர். தற்போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டப் பிறகு அந்த சில்லறை சீர்திருத்தங்களையும் மறுத்து ஈழத் தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

ஆனால் 13வது சட்டத்திருத்தத்தை அப்படியே செயல்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று காங்கிரஸ் கட்சியினரும், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளும்,
இடது, வலது போலி கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் கூறுகின்றன. அவ்வாறு அச்சட்டத்தைத் திருத்தாமல் செயல்படுத்தினாலும் ஈழத் தமிழர் மக்கள் பிரச்சினைக்கு எள் முனை அளவு கூட அது தீர்வு வழங்கப்போவதில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசை பாதுகாப்பதற்கான  திட்டமே அது.
சிங்கள இனவெறி அரசின் அதிகார அடிப்படையை சிதைக்காமல், சட்டத்திருத்தம் எனும் பேரில் அந்த அதிகாரத்தை குறைக்காமல் அப்படியே வைத்திருக்கும் விட்டுக்கொடுத்தல் அது.

 ஆனால் புரட்சிகர மாறுதல் என்பது அதிகாரத்தின் அடிப்படையையே பறித்துவிடுகிறது. சீர்த்திருத்தவாதத் தேசிய இனத்திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விசேஷ உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை. அது பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவ தில்லை; தேசிய இன ஒடுக்குமுறையை அதன் எல்லா வடிவங்களிலும் அது ஒழிக்கவில்லை. “சுயநிர்வாகம்” பெற்ற ஒரு தேசிய இனம் “ஆளும்” தேசிய இனங்களுக்கு சமமான உரிமைகளைப் பெற்றிருக்காது. “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வாகும்.

வடக்கு மாகாணத் தேர்தலும் இராணுவ மயமாக்கலும்

இராஜபட்சே கும்பல், தமிழர் பகுதிகளைக் கடும் இராணுவ மயமாக்குவதையும், சிங்கள மயமாக்குவதையும் மூடி மறைக்கவே வடக்கு மாகாணத் தேர்தல், ஜனநாயகம் என்று ஒரு மோசடி நாடகத்தை
அரங்கேற்றுகிறது. ஈழத் தமிழினத்தை முற்றாக அடிமைப்படுத்துவதற்கான சதித்திட்டமே வடக்குமாகாணத் தேர்தல்.வரலாறு காணாத அளவிற்கு இலங்கை இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (1980) முப்படைகளும் சேர்ந்து மொத்தம் 30 ஆயிரம் இராணுவ வீரர்களைத்தான் கொண்டிருந்தது. இன்று அது 15 மடங்காக உயர்ந்து 4,50,000 வீரர்களைக் கொண்டதாக ஊதிப் பெருத்துள்ளது. இது தவிர சிவில் பாதுகாப்புப் படையில் 30,000 பேர், பாதுகாப்புப் படையில் 45,000 பேர், காவலர்கள் 85,128 என இலங்கை அரசு இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவம் என்பது பொதுவான இராணுவம் அல்ல, அது முழுக்க முழுக்க சிங்களர்களைக் கொண்ட சிங்கள இனவெறி இராணுவமாகும்.

மொத்த இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் 14 விழுக்காடு நிலப்பரப்பில் ஏறத்தாழ 60 விழுக்காடு சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களும், பிற படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 1000ம் பேருக்கு 200 பேர் என (5 பேருக்கு ஒரு இராணுவம்) என்ற அடிப்படையில் இராணுவத்தினரை நிறுத்தி தமிழர்கள் அச்சுறுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு உலகில் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் குவிக்கப்படவில்லை.

அமெரிக்க இராணுவத் துறையின் சார்பாக, உலக அளவில் நடைபெற்ற 41 உள்நாட்டுப் போர்களைப் பற்றிய ஆய்வு கூறுவதாவது: “இத்தகைய உள்நாட்டுப் போர்களைக் வெற்றிகரமாக கையாள 1000 பேருக்கு 40-50
இராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவது போதுமானது” என்று கூறுகிறது.

 2007ல், ஈராக்கில் உச்சக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்தபோது கூட 1000க்கு 40 பேர்தான் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரான்சின் அல்ஜீரியப் போரில் 60 பேர் என்ற அளவிற்குத்தான் நிறுத்தியிருந்தது. ரஷ்யா செச்சன்யாவில் 150 பேர் என்ற அளவிற்கு நிறுத்தியிருந்தது. ஆனால் தமிழர் பகுதிகளில் போர் முடிந்த பிறகும் 1000க்கு 200 பேர் என்ற அளவிற்கு நிறுத்தியிருப்பது, தம் சொந்த நாட்டு மக்களின் மீதே காலனிய ஒடுக்குமுறையை சிங்கள அரசு தொடுத்துள்ளதைத் தான் காட்டுகிறது. சிங்களர்களின் காலனியாக ஈழத் தமிழர் பகுதி மாற்றப்பட்டுவருகிறது.

அத்துடன் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றத்தை இராணுவத்தின் உதவியுடன் நடத்தி வருகின்றனர்.

தமிழர் பகுதி சிங்களமயமாக்கப்படுதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(TNA) உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி சிங்கள இராணுவம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில் 7,000 சதுர கி.மீ பரப்பை
ஆக்கிரமித்துள்ளது. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான நிலப் பிரதேசத்தை அழிக்கின்றனர். மாற்றுக் கொள்கைக்கான மையம் மற்றும்
பன்னாட்டு நெருக்கடிக்குழு ,இந்த நிலப்பறிப்புகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

      “இராணுவம் தங்குவதற்காகவும், உயர்பாதுகாப்பு வலையங்களுக்காகவும் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அதற்கு சட்டப்படியான நட்ட ஈடுகள் தருவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்தம் செய்வதுமில்லை. மேலும் இவ்வாறு பறித்த தமிழர் பகுதிகளில் இராணுவமே திட்டமிட்டு சிங்களர்களைக் குடியேற்றம் செய்கிறது.”

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையேயுள்ள வரலாற்று ரீதியான இணைப்பைத் துண்டிக்கிற வகையிலும், சிங்களப்
பகுதியான அனுராதபுர மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும் “வெலிஓயா” என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கி அங்கே சிங்களக் குடியேற்றத்தை நடத்துகின்றனர்.

இவ்வாறு தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்திருந்த மிகப்பெரிய மாவீரர் கல்லறை தகர்க்கப்பட்டு இன்று அந்த இடத்தில் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இராஜபட்சே கும்பல் தமிழர் பகுதியை இராணுவமயமாக்கி ஈழத்தமிழினத்தை சிதைத்து சீரழிப்பதை மூடி மறைப்பதற்கும், தமிழினத்தை அடிமையாக்கவுமே வடக்கு மாகாணத் தேர்தல்!

இராணுவத்தை ஒரு பகுதி திரும்பப் பெறுதல் என்று ஜனநாயக நாடகமாடுகிறது. தமிழர்பகுதிகளில் உள்ள இராணுவத்தை முழுமையாக திரும்பப்பெறாமல், சிங்களமயமாக்குவதை தடுத்து நிறுத்தாமல் தேர்தல்
நடத்துவதால் தமிழர்களுக்கு ஜனநாயகம் கிடைக்காது. அடிமைத்தனமே மிஞ்சும். எனவே இனவெறிப் பாசிசத்தை நிலைநாட்ட நடக்கும் வடக்குமாகாணத் தேர்தலைப் புறக்கணித்து - தமிழ் ஈழத்திற்கான பொது
வாக்கெடுப்புக் கோரிக்கையை முன்னெடுப்பது தான் ஜனநாயகத்திற்கான ஒரே வழியாகும்.

காமன் வெல்த் மாநாடு

13-வது அரசியல் சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் என இராஜபட்சே கும்பல் “புனித” வேடம் போடுவதன் மூலம் 2013-ஆம் ஆண்டு காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டம்போட்டு செயல்படுகிறது.  அதன் மூலம் தனக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்து தப்பித்துவிடலாம் என அது கனவுகாண்கிறது. ஆனால் இலங்கையில் நடந்த இறுதியுத்தம் “ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை” என்பதும், இராஜபட்சே கும்பல் சர்வதேச போர் நெறிகளை மீறி போர்க்குற்றம் புரிந்துள்ளது என்பதும் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், என்ற “கத்தி” இராஜபட்சே கும்பல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள், தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள், இலங்கையில் நடக்கும் மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட ஜ.நா மனித உரிமை கமிஷ்னர் இலங்கைக்குப் பயணம் செய்தது எல்லாம் இராஜபட்சே கும்பலுக்கு ஒரு நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது. இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்று கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. இந்தியாவின் தலையீட்டால் இங்கிலாந்து தன் எதிர்ப்பைக் கைவிட்டது. மற்ற இரு நாடுகளும் கலந்து கொள்வது இல்லை என அறிவித்துவிட்டன. சர்வதேச அளவில் தான் தனிமைப்படுவதை தடுத்து நிறுத்தவும், போர்க்குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவும் எப்படியாவது காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திவிட வேண்டும் என இராஜபட்சே கும்பல் துடிக்கிறது. இந்திய அரசும், காங்கிரசுக் கட்சியும் அதற்குத் துணைபோகின்றன.

எனவே தமிழக மக்களும், உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும்
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்து முறியடிக்க வேண்டும். போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலை தூக்கிலேற்றக் கோரும் இயக்கத்தையும், ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதைதயும் தொடரவேண்டும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பே தீர்வு

இலங்கை இன வெறி அரசின் கீழ் ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது கிடைக்கப்போவதே இல்லை. மேலும் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்தியது ஒரு இனப்படுகொலைதான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இனப்படுகொலைக்குள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை நடத்திவரும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்பிற்குள் சேர்ந்து வாழவே வழியில்லை. இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் தனியாக பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வது ஒரு ஜனநாயக ரீதியான தீர்வாகும். இது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு நீதியானக் கோட்பாடாகும்.

எனவேதான் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கை ஒன்றுதான் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறுகிறோம். அதுவே ஈழத்தமிழர்களின் இலட்சியமாகும். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை
என்பது பேரம் பேசுகின்ற ஒரு பொருளல்ல.

அந்த இறுதி லட்சியத்தை அடையும் வரை இடைக்கால சீர்திருத்தம் என்பது ;

உடனடியாக தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் முற்றாக திரும்பப்பெற வேண்டும்; 

தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; 

ஈழத்தமிழர்களின் அரசியல் ஜனநாயக உரிமைகள் சிவில் நிர்வாகத்தில் தமிழ் மக்களின் பங்கு ஆகியவற்றுக்குப் போராடவேண்டும்; 

இத்தகைய ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் ஆதரவளிப்பது ஜனநாயகக் கடமையாகும்.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவின் துரோகம்

இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத்தமிழின அழிப்புக்கான இறுதிப்போரை இராஜபட்சே கும்பலோடு கூட்டு சேர்ந்து நடத்தின. இராஜபட்சே கும்பலின் இனப் படுகொலையை மூடிமறைக்கவும், போர்க்
குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது.

தற்போது 13வது சட்டத்திருத்தம், வடக்குமாகாணத் தேர்தல் என்ற பேரில்
ஈழமண்ணில் இராணுவ மயமாக்கலுக்கும், சிங்கள மயமாக்கலுக்கும் துணைபோகிறது.

காமன் வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு இந்தியா முழு மூச்சுடன் செயல்படுகிறது அதன் மூலம் போர்க்குற்றவாளியை பாதுகாக்கிறது.

இரசிய, சீன ஏகாதிபத்திய அணி இலங்கையில் பலப்பட்டுவிடும் என்று கூறி அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்து இராஜபட்சே கும்பலை ஆதரிப்பதை நியாயப் படுத்துகிறது.

இவ்வாறு இரு ஏகாதிபத்திய அணிகளுக் கிடையில் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்கு நடக்கும் போட்டியில் ஈழத்தமிழினம் பலியிடப்படுவதை எதிர்த்துப் போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியான பா.ஜ.க-வும், ஈழம் பற்றியக் கொள்கையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையையே கடைபிடிக்கிறது. இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், மகஇக போன்ற போலிப் புரட்சியாளர்களும் தனிநாடு கோரிக்கை சாத்தியமே இல்லை என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் - இரு இன தொழிலாளர்களின் ஒன்றுபட்டப் போராட்டமே தீர்வு என்றும் கூறுகின்றன.

 ஈழத்தமிழர்கள் எப்போதுமே தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று கூறி தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை மறுக்கின்றன. இதன் மூலம் சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோவதுடன்
போர்க்குற்றவாளி இராஜபட்சேவை பாதுகாக்கின்றன. அத்துடன் இந்திய விரிவாதிக்கத்திற்கும் துணைபோகின்றன.

திமுக, அதிமுக போன்றக்கட்சிகள் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்புதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறிக்கொண்டே 13-வது சட்டத்திருத்தத்தை ஆதரிக்கின்றன. கருணாநிதி, மோடியின்
அமெரிக்க விசா விவகாரம் பற்றிப் பேசும்போது “திமுக-வைப் பொறுத்தவரை மத்திய அரசின் எந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையிலும், அதன் உள்விவகாரங்களில் குறுக்கிடுவதில்லை என்பதை நான்
பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” என்று கூறுகிறார். இதன் மூலம் ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்கு துணைபோகும் இந்திய அரசின் நிலைபாட்டை எதிர்க்கமாட்டார் என்பதை வெளிப்படுத்திவிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் இயற்றுவதும், மறுபுறம் 13வது - சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்று கூறி இலங்கை, இந்திய அரசுகளின் சதித்திட்டத்திற்கு துணைபோவது என்ற நிலையையே மேற்கொண்டுள்ளார். இவ்விரு கட்சிகளும் பொது வாக்கெடுப்புக் கோரிக்கையில் உறுதியாக நிற்கப்போவதுமில்லை ஈழத்தமிழர் நலனுக்காக இறுதிவரை போராடப்போவதுமில்லை.

இலங்கையில் அனைத்துத் துறையிலும் இராணுவ மயமாக்கப்படுவதை கட்டுரை எழுதி அம்பலப்படுத்துகிறார் ஏகாதிபத்திய எடுபிடி அ.மார்க்ஸ். பின்நவீனத்துவவாதிகளும், புதிய இடதுகளும், இலங்கை அரசை சென்ற நூற்றாண்டுகளில் பாசிசம் என்றோ, இல்லை நேரடியான இராணுவ ஆட்சி என்றோ வகைப்படுத்த முடியாது. அதை எவ்வாறு வகைப்படுத்துவது என்று புரியவில்லை எனக் கூறுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கின்றனர். தமிழ் ஈழம் தனியாக பிரிவதுதான் தீர்வு என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

தற்போது தமிழக மாணவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக அணி திரள்வதையும் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தையும் மூடி மறைத்து மதுரையில் “டாஸ்மாகை” எதிர்த்த உண்ணாவிரதத்தை தொண்டு நிறுவனங்கள் நடத்தி மாணவர்களை பிளவுபடுத்துகின்றன. ஏகாதிபத்தியக் கைக் கூலிகளும், இந்திய அரசின் எடுபிடிகளுமான தொண்டு நிறுவனங்கள் ஈழ ஆதரவு மாணவர் போராட்டத்தை திசை திருப்ப திட்டமிட்டு நடத்தும் நாடகம் இது.

சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆதரவாகவும் இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுவது இந்திய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் கடமையாகும்.

எனவே திராவிடக்கட்சிகளின் நாடகத்தை எதிர்த்தும், தொண்டு நிறுவனங்கள், அடையாள அரசியல்வாதிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு
ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரண்டு போராட அறைகூவி அழைக்கின்றோம்.

* இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்கவும் சிங்களப் பேரினவாத அரசை நிலை நிறுத்தவுமே!

*சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் நடத்தப்படும் வடக்கு மாகாணத் தேர்தல் அரசியல் அதிகாரம் வழங்க அல்ல! அடிமைப்படுத்தவே!

*இந்திய அரசே! இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க்குற்றங்களை நியாயப்படுத்தும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

* தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர், 2013

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே, 144 தடையை உடனே நீக்கு!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

       ஜெயலலிதா அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144
தடை நியாயப் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள் மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில் தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.

       சாதி ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144 தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் “ம்” என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.

       அண்மையில் தர்மபுரியை அடுத்த கொண்டம்பட்டியில் ஜெயராமன் என்ற கூலி விவசாயி வேறொரு உயர்சாதியைச் சார்ந்தவரின் நிலத்தில் வேலை செய்யும்போது - அங்கே தவறான மின் இணைப்பின் காரணமாக - மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்துவிட்டார். அந்த மரணம் அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் என்று வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கொண்டம்பட்டி மக்கள் பிணத்தை எடுக்கவிடாமல் மறியல் போராட்டம் நடத்தினர். அதற்குப் பழிவாங்கும் விதமாக, காவல்துறையினர் நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து இருட்டாக்கிவிட்டு அவ்வூரில் புகுந்து அம்மக்கள் மீது தடியடி நடத்தி பொய் வழக்கில் கைதுசெய்து சிறையிலடைத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலை தடுத்தார் என்ற காரணத்துக்காக அவ்வூரைச் சார்ந்த சி.ஆர்.பி.எப். இல் பணிபுரியும் மாதையனை அடித்து காலை உடைத்து சிறையிலடைத்தனர். பின்னர் அவர் மாவோயிஸ்டு ஆதரவாளர் என்று பொய் கூறி அவர் வேலைக்கும் உலைவைக்கும் கொடுமையை புரிந்துள்ளனர்.

       கொண்டம்பட்டியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சுவரொட்டி ஒட்டியது. உடனே காவல் துறையினர் ம.ஜ.இ.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் மீதும், பிரசுரம் அச்சடித்துக் கொடுத்த அச்சக உரிமையாளர் மீதும் செப்டம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் பிரசுரத்தை வைத்து 124A சட்டத்தின் கீழ் இராஜதுரோக குற்றம் சுமத்தி கைது செய்தது. அத்துடன் நாயக்கன் கொட்டாயில் செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரிப் புரட்சித் தியாகிகள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவிக்க மாநில அமைப்பாளர் ஞானம் தலைமையில் சென்ற 13 ம.ஜ.இ.க. தோழர்கள் உள்ளிட்டு 19 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ஜெயா ஆட்சியில் காவல் துறையினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பதும், தியாகிகளின் சிலைக்கு மாலை அணிவிப்பதும் கூட இராஜதுரோகக் குற்றமாகி விட்டது. இத்தகைய சாதாரண ஜனநாயக உரிமையைக் கூட 144 தடையைக் காட்டிப் பறிக்கிறது.

       ஜெயா அரசு 144 தடையை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்குகிறது. தமிழகத்தையே 144ன் கீழ் ஆட்சி செய்யத் துடிக்கிறது. தர்மபுரி கலவரத்திற்குப் பின் இராமதாசு கும்பல் மகாபலிபுர சித்திரைத்
திருவிழா வன்னிய இளைஞர் மாநாட்டின்போது மரக்காணத்தில் நடத்திய சாதிவெறித் தாக்குதலைக் காரணம் காட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடையை அமல்படுத்தியது. தற்போது பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜையின் போது 144 தடைவிதித்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கெடுபிடிகளைத் தீவிரமாக்கியது. ஆனால் தேவர் குரு பூஜையை தமிழக அரசே அரசு விழாவாக நடத்துகிறது.

அண்மையில் உயர்நீதிமன்றம் இதுபோன்ற சாதி மோதல்களை உருவாக்கும் குரு பூஜைகளை தடைசெய்யவேண்டும் என்றும், அதற்குப் பதிலாக தலைவர்கள் சாதி வெறிக்கு எதிராக சமூக அமைதிக்காக பணியாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு தேவர்  குரு பூஜையை மட்டும் அரசு விழாவாக நடத்துவது ஏன்? இமானுவேல் சேகரனின் குருபூஜையை அரசு விழாவாக மாற்ற மறுப்பதேன்? தாழ்த்தப்பட்ட மக்களை குற்றவாளிகளாகக் காட்டத்தானே? மேலும் 144 தடையைக் காரணம் காட்டி சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களை தடைவிதிப்பது சாதிவெறிக்குத் தீனிபோடுவது இல்லையா? எனவே ஜெயா அரசின் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

       இன்று மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திவரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால், அமெரிக்காவின் புதிய காலனியாக நாட்டை மாற்றும் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிக்கின்றன. அதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போர்க்கோலம் பூண்டுவருகின்றனர்.

       இத்தகைய அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், மக்களைப் பிளவுபடுத்தவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு வங்கிகளை உருவாக்கும் விதமாகவும் மக்களை சாதி, மத, இன மோதல்களில் தள்ளிவிடுகின்றன. உ.பி.இல் மதக் கலவரம், ஆந்திராவில் மொழிவாரி மாநிலத்தை உடைத்து ஒரே இனத்திற்குள்ளேயே மோதல்கள், தமிழகத்தில் சாதிக் கலவரம் என மக்களை மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் செயல்படுத்தி வருகின்றன. பின்னர் அதையே காரணம் காட்டி அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மக்களை ஒடுக்குகின்றனர். உழைக்கும் மக்களை சாதி, மத, இன மோதல்களில் ஈடுபடுத்தும் சாதிவாத, மதவாதத்தை எதிர்த்தும் மத்திய மாநில அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அரசுபயங்கரவாதத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள்வது மிகமிக அவசியமான தருணம் இது.

       தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவோ கருணாநிதியின் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக ஜனநாயக ஆட்சியை வழங்குவேன் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறினார். இன்று 144, 124A, சட்டங்களின் மூலம் ஒரு சர்வாதிகார போலீஸ் ஆட்சியை நடத்திவருகிறார். எனவே ஜெயலலிதா அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களும், உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒன்றுபட்டுப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

 * சாதிக் கலவரத்தின் பேரால் அரசியல் ஜனநாயக உரிமையை பறிக்கும்
144 தடையைத் திரும்பப் பெறு!

*  சாதிக் கலவரம் செய்வோர் மீது நடவடிக்கை எடு!
144 தடை மூலம் மக்களை ஒடுக்காதே!

 * 144இன் கீழ் கொண்டம்பட்டியில் போலீஸ் அடக்குமுறையை எதிர்ப்பது –
தியாகிகள் சிலைக்கு மாலை அணிவிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா?

*124A வழக்கைத் திரும்பப் பெறு! கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்!

 * ஜெயா அரசே! 144, 124A சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றாதே!

* ஜெயா ஆட்சியின் போலீஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2013
================

Sunday 15 September 2013

நக்சல்பாரிப் புரட்சித் தோழர்கள் அப்பு பாலன் சிலைக்கு மாலை அணிவிக்க ஜெயா அரசு தடை! 144, 124A கறுப்புச்சட்டங்களை ஏவி கழகத்தோழர்கள் கைது!


தர்மபுரி: அப்பு பாலன் அரிவாளும் சம்மட்டியும்


இவர்களுக்கு மாலையிடத்தடை!
இவர் முற்றத்தில் கூடினால், குற்றம் என்கிறது இந்திய அரசு!
கைது செய்து காவலில் போடுகிறது ஜெயா அரசு!


Wednesday 4 September 2013

தர்மபுரி காவல் துறை தடியடி! கழகம் கண்டனச் சுவரொட்டி!!

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய சொல்லிய கொண்டம்பட்டி மக்கள் மீது மின்சாரம் துண்டித்து தர்மபுரி காவல்துறை தடியடி!