Tuesday 30 August 2016

செப்டம்பர் 2- தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்க!



செப்டம்பர் 2  தொழிலாளர்  வேலை நிறுத்தம் வெல்க!

* பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றும் மோடி ஆட்சியை எதிர்த்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

* பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்ப்போம்!

* விலைவாசி உயர்வுக்குக் காரணமான ஊகவாணிபத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

* அமைப்பாக்கப்படாத தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்குமான ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பிற்காகப் போராடுவோம்!

* அனைத்துச் சங்கங்களையும் புறக்கணித்து, காவிக் காடையர் சங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தும் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!

* தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி* ரூ. 18,000 ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்போம்!

* உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!

 *குறிப்பு: இங்கே குறிப்பிடப்படும் கூலி, மாதக் கூலியாகும். ப-ர்


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.

ஆகஸ்ட் 2016
=====================================================================

Tuesday 23 August 2016

தியாகிகள் தின கழகப் பொதுக்கூட்டங்கள்





செப்-12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

செப்-12, தியாகிகள் நினைவு நாள்!



*  அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின்புதியகாலனியாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்துத்துவப் பாசிசம்!

*   உலகமேலாதிக்க அமெரிக்காவின் “இளைய பங்காளி”,இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

*   இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன் “கூடிக்குலாவும்” பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!

*    அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும்,  இந்துத்துவப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகளே!

*    ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மக்கள் அணியைக் கட்டுவோம்!

*    வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!

*    கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு வணிகமயமாக்குவதை  எதிர்த்து முறியடிப்போம்!

*    புதிய காலனிய “கார்ப்பரேட்” வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்!  நிலச் சீர்திருத்தத்திற்காக போராடுவோம்!

*   தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய  உரிமைக்காக போராடுவோம்!

*    காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
படைகளை திரும்பப் பெறு!

*    சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!

*    ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம்!
தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க போராடுவோம்!

*    மத, சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம்!

சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஆகஸ்ட்                                                                                                                                                                    2016

Monday 1 August 2016

புதுமைப் பதிப்பகம் கட்சிக் கருத்துரை- தோழர் மனோகரன்

சமரன் வெளியீட்டகத்தின் தலைமை பொறுப்பாளர் தோழர் மனோகரனின்  புதுமைப் பதிப்பகம்  குறித்த 


ஒளிப்பதிவு

புதுமைப் பதிப்பகத்தை அறிமுகம் செய்வது

(உருவப் படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.)

ஒலிப்பதிவு


 புதுமைப் பதிப்பகம்

புதுமை பதிப்பகம் சமரனின் தத்துவார்த்த அரசியல்  திசை வழியில் இயங்கும் சுயாதீன பதிப்பகம் ஆகும். இதுவரையில் 10 நூல்களை வெளியிட்டுள்ளது. அதன் மற்றொரு வெளியீட்டு நிகழ்வு  21.05.2016 அன்று மாலை 6 மணியளவில், சென்னை-600 094 (நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்) சூளைமேடு, சவுராஷ்டிரா நகர் 4வது தெரு, கரூர் வைஸ்யா வங்கி கூட்டுறவு கட்டிடத்தில்  நடந்தது.

தோழர் இளங்கோ அவர்கள் தலைமை உரையாற்றினார். பின் திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் கருத்துரை வழங்கினார் அவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் திரு சங்கரசுப்பு அவர்களும், எழுத்தாளர் கமலாலயன் அவர்களும், சிந்தனை புக்ஸ் பதிப்பாளர் மாதவ் அவர்களும் கருத்துரை வழங்கினர். இறுதியாக சமரன் வெளியீட்டகத்தின் தலைமை பொறுப்பாளர் மனோகரன் அவர்கள் கட்சிக் கருத்துரை ஆற்றினார்.

 10 புத்தகங்கள் இந்திய ரூபாய் 660 எனினும் பரப்புதலுக்காக அவை ரூபாய்.500 விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

நூல்களைப் பெற புதுமைப் பதிப்பகம், பிரதீப், செல்: 7200260086

சமரன்: வழக்கறிஞர்களின்போராட்டத்தை ஆதரிப்போம்!

ஜனநாயக உரிமைப் பறிப்பை எதிர்த்துத் தொடரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தமானது வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக்குகிறது. ‘இம்’ என்றால் வனவாசம், ‘ஏன்’ என்றால் சிறைவாசம் என வழக்கறிஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் கருப்புச் சட்டம் நீதித்துறை பாசிசத்தின் வெளிப்பாடேயாகும். இக்கருப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள். இறுதியாகப் பல்லாயிரக் கணக்கான வழக்கறிஞர்கள் அணிதிரண்டு சென்னை உயர் நீதிமன்ற முற்றுகையில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களின் முற்றுகைப் போராட்டத்திற்குப் பிறகும் கூட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டது. மாறாக போராடும் வழக்கறிஞர்களை மிரட்டும் விதமாக 126 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக அரசு 29 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து 5-பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இத்தகைய சூழலில் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்று, இடைநீக்கம் செய்தவர்கள் பணிக்குத் திரும்பும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புத் தொடரும் என்று தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்கிறது.

நீதித்துறைப் பாசிசம்

வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தின் படி, நீதிபதிகளுக்குக் கொடுப்பதாகச் சொல்லி கட்சிக்காரரிடம் பணம் வாங்குவது, நீதிமன்ற ஆவணத்தைத் திருத்துவது, நீதிபதிகளைப் பார்த்துக் கோபமாகக் குரலை உயர்த்திப் பேசுவது, புருவத்தை நெறிப்பது, நீதிபதிகளின் மீது ஆதாரமில்லாமல் ஊழல் புகார்களை மேல் நீதிமன்றத்திடம் கொடுப்பது-பரப்புவது, நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் செல்வது, நீதிமன்றத்திற்குள் குடித்துவிட்டு வருவது ஆகியவை அனைத்தும் ஒழுங்கீனமாகக் கருதப்படும். அதன் படி கீழமை நீதிமன்றமாக இருந்தால், மாவட்ட நீதிபதியும், உயர் நீதிமன்றமாக இருந்தால் அந்தந்த நீதிபதிகளே விசாரணை செய்து தண்டனை அளிப்பார்கள். இடைக்காலத்தில் எவ்வித விசாரணையும் இன்றி வழக்கறிஞர் உரிமத்தை ரத்துச் செய்ய முடியும். இறுதியாக வாழ்நாள் முழுவதும் உரிமத்தை ரத்துச் செய்ய முடியும். இச்சட்டப்படி குற்றம் சுமத்துபவரே நீதிபதியாக இருந்து தண்டனை அளிப்பாராம். இதன்படி நீதிபதிகள் நினைத்தால் விசாரணை இன்றியே வழக்கறிஞர்களைத் தண்டிக்கலாம். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் கூட நாயைக் கொல்வதாக இருந்தாலும் விசாரணைக்குப் பிறகுதான் கொல்வோம் என்றார்கள். ஆனால் இன்றைய புதிய காலனியக் கட்டத்தில் விசாரணையே கிடையாது, தண்டனை மட்டுமே என்கிறார்கள். வழக்கறிஞர்கள் மீதான இந்த வாய்ப்பூட்டுச் சட்டம் ஒரு நீதித்துறை பாசிச சட்டமே.

வழக்கறிஞர்கள் மீதான பாசிச அடக்கு முறைகளுக்கு உண்மையான காரணம் என்ன?

ஈழத்தில் சிங்கள இனவெறி அரசோடு, இந்திய அரசும் சேர்ந்து கொண்டு நடத்திய இனப் படுகொலையைக் கண்டித்து மிகப்பெரும் போராட்டத்தை, சென்னை வழக்கறிஞர்கள் நடத்தினர். அதை அன்றைய மத்திய அரசு “ஆபரேஷன் தி பிளாக் கோட்” என்றபேரில் இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியது. தமிழக உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்றும், நீதிபதிகளின் நியமனத்தில் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதை ஒழித்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், சில நீதிபதிகளின் ஊழலை எதிர்த்தும் சீரழிந்து கிடக்கும் நீதித்துறையைச் சீர்திருத்த வேண்டும் என்றும் தமிழக வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.

வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டங்களை ஏற்க முடியாமல் சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போராடிய 43-வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற எடுபிடியான இந்திய பார் கவுன்சிலை வைத்துச் சஸ்பெண்ட் செய்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படைகளைக் குவித்துச் சிவில் நீதிமன்றங்களை இராணுவ நீதி மன்றங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வெளிப்படையான விசாரணை முறைகள் ஒழிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின்படி வழக்கறிஞர்களை நிரந்தரமாக அடிமைகளாக்க முயற்சிக்கிறது. காலனிய காலச் சட்டங்களைத் தூசு தட்டி எடுக்கிறது.

அதாவது வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுக்கலாம் என்ற 1926 ஆம் ஆண்டுக் காலனியக் காலத்துச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அன்று தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று ஜனநாயக உரிமைகளுக்காகவும், மொழி உரிமைக்காகவும், சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராகவும் போராடும் வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீரழிந்து நிற்கும் நீதித்துறை

மது அருந்திவிட்டு வருவது, லஞ்ச ஊழலில் ஈடுபடுவது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடவில்லை என்றோ, அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றோ வழக்கறிஞர்கள் போராடவில்லை. அத்தகைய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பல சட்டங்கள் இருக்கின்றன. வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். மாறாக வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் சட்டத்தை எதிர்த்துத்தான் போராடுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றங்களை வழக்கறிஞர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? நீதிபதிகள் செய்யவில்லையா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டு நாட்டில் ஊழல் செய்த பெரும் ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளைப் பல நூறுகோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதிபதிகள் விடுதலை செய்வது அன்றாடப் பத்திரிக்கை செய்தியாக வரவில்லையா? நரபலிப் புகழ் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமியை லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு நீதிபதி விடுதலை செய்யவில்லையா? கன்னிப் பெண்களைக் கற்பழிக்கின்ற, உடன் பணிபுரிகின்ற பெண்களைப் பலாத்காரம் செய்கின்ற காமுகர்களாக நீதிபதிகள் இல்லையா? சேம்பரிலேயே பார் வைத்து தண்ணி அடிக்கும் நீதிபதிகள் இல்லையா? இவற்றையெல்லாம் எவ்வாறு ஒழிப்பது? இந்த நீதிபதிகளை தண்டிப்பது யார்? தண்டிப்பதற்கு வழி உண்டா?

நீதிபதிகளுக்கான ஒழுங்கு விதிகளுக்குப் பதில், அவர்களைத் தற்காத்துக்கொள்வதற்கு நீதிபதிகள் பாதுகாப்புச் சட்டம்-1985, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்-1971 ஆகியவற்றைப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்துகிறார்கள். தண்டிக்கவே முடியாதவர்களாக நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக உலாவருகின்றனர். கடந்த 68-ஆண்டுகளில் ஒரே ஒரு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூடத் தண்டிக்கப்பட்டதில்லை. நீதித்துறை சீரழிவிற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

பாராளுமன்றம், சட்டமன்றங்கள் போன்ற மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளும்; காவல் துறை உள்ளிட்ட அதிகாரவர்க்க அரசு நிர்வாகத் துறைகள் அனைத்தும் மக்கள் விரோதமாகச் செயல்பட்டு இலஞ்ச ஊழலில் திளைத்து வரும் இன்றைய சூழலில், நீதிமன்றங்களைத் தான் கடைசிப் புகலிடமாக மக்கள் நம்பிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் இன்று அந்த நீதித்துறையே மாபெரும் சீரழிவில் சிக்கி நாற்றமெடுக்கிறது. இவ்வாறு நீதித்துறை சீரழிவிற்கான காரணம் என்ன?

புதிய காலனியதிக்கமும் நீதித்துறை சீரழிவும்

இன்று இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் புதிய காலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகள்தான் நீதித்துறையின் இத்தகைய சீரழிவுகளுக்குக் காரணமாகும். அதுவே நாட்டு மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

1950-ஆம் ஆண்டுகளில் கீன்சிய கொள்கையின் அடிப்படையில் சமூக நல அரசுக்கான திட்டங்களை உலகம் முழுவதும் ஏகாதிபத்தியவாதிகள் அமல்படுத்தினர். முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது, சோஷலிச அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்று கூறி “சேம நல அரசு” என்ற முதலாளித்துவச் சீர்திருத்த கொள்கைகளை அமல்படுத்தினர். இந்திய அரசாங்கமும் 1947-ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு நேருவின் சோஷலிசம் என்ற பேரில் ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த “சேம நல அரசு” கோட்பாட்டையே அமல்படுத்தியது. அதன் அடிப்படையில் சில உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதனடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் போன்ற கோட்பாட்டைச் சேர்த்தார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, எங்குச் சென்று வேண்டுமானாலும் வாழும் உரிமை போன்ற முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் மற்றும் சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, தொழில் பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை, குழந்தைகள் பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டன. சோஷலிசப் பொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் என்ற பேரில் பொதுத்துறையைக் கட்டியமைத்தது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்று நடத்தியது.

சுதேசியம் பேசி அந்நிய வர்த்தகக் கட்டுப்பாட்டுச் சட்டம் (FERA Act), ஏகபோகத் தடைச் சட்டம் (MRTP Act) போன்ற சட்டங்களும்; 8-மணி நேர வேலை நேரம், வாரத்தில் ஒரு நாள் கட்டாய ஓய்வு, பெண் ஊழியர்களை இரவு நேரங்களில் பணி அமர்த்தக் கூடாது, பென்சன் திட்டம் உட்பட பல்வேறு தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டன. வணிகப் பாதுகாப்பிற்கு 1947-ஆம் ஆண்டு மதராஸ் (தமிழ்நாடு) கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் ஆகிய சட்டங்களை இயற்றியது. கீன்சிய பொருளாதாரக் கொள்கைகள் 1970களில் படுதோல்வி அடைந்தன. முதலாளித்துவப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் சந்தைப் பொருளாதாரம் என்ற பேரில் புதிய தாராளக் கொள்கைகளை உலகம் முழுவதும் திணித்தனர்.

1990-களுக்குப் பிறகு நெருக்கடியிலிருந்து மீள்வது என்ற பேரில் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த உலகமய, தாராளமய கொள்கைகளை இந்திய அரசு அமல் படுத்திவருகிறது. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு அமெரிக்காவின் புதிய காலனியத்திற்குச் சேவை செய்வதுடன் மக்கள் மீது அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் தாக்குதலைத் தொடுக்கின்றன. இவை அனைத்தும் சட்டத்திற்கு விரோதமாகவே அமல்படுத்தப்பட்டன.

உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய கடந்த 25 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனம் ஆதிக்கம் பெற்று இந்திய நாடு வரலாறு காணாத அளவிற்குக் கொள்ளையிடப் படுகிறது. இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் போன்ற அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்க்களுக்குத் திறந்துவிடப் பட்டுள்ளது. நீர், நிலம், சுரங்கங்கள், ஆறுகள், கிரானைட் மலைகள் அனைத்தும் கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளன. உப்பு, சிமென்ட், ஜவுளி, காகிதம் போன்ற துறைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

வங்கிகள், காப்பீடு, பென்சன் திட்டம் உள்ளிட்ட நிதிநிறுவனங்களில் பன்னாட்டு நிதிநிறுவனங்கள் நூறு சதவீதம் வரை அனுமதிக்கப்படுகின்றன. தகவல் தொழில் நுட்பம், பாதுகாப்பு, இரயில்வே கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உயிர்காக்கும் மருந்து உற்பத்தி போன்ற அனைத்துத் துறைகளிலும் பன்னாட்டு கம்பெனிகள் ஈடுபட்டு நாட்டின் செல்வங்கள் சூறையாடப்படுகின்றன.

கார்ப்பரேட் விவசாயம் என்ற பேரில் வேளாண்மைத் துறையில் அமெரிக்காவின் மான்சாண்டோ, கார்கில், பெப்சி உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கப்பட்டுவிட்டது. வேளாண் உற்பத்தி, வணிகம், ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் காரணமாக உள்நாட்டு விவசாயம் அழிந்து 3.5 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இது மேலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மாநில அதிகாரத்தில் இருந்த கல்வி, மருத்துவம், பொதுச் சுகாதாரம் போன்ற துறைகள் அனைத்தும் பொதுப் பட்டியல் என்ற பேரால் மத்திய அரசின் பட்டியலில் சேர்த்துத் தனியார்மயம், தாராளமயம், வணிக மயமாக்கப்பட்டு வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் பொறுப்புக் கைவிடப்படுகிறது.

அந்நிய மூலதனத்தை வரவேற்பது என்ற பேரில் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பறித்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் (ஒழுங்குமுறைச்) சட்டம், தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்ட தொழிற்சங்க திருத்த சட்டம், ஓய்வூதிய சீர்திருத்த சட்டம் எனப் பல்வேறு தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் பல சட்டங்களைப் பாராளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்ததாகும். அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளும், மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் மேற்கண்ட தேசவிரோத புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். எவ்வித சட்டப் பின்னணியோ, நாடாளுமன்ற விவாதங்களோ இன்றி நரசிம்மராவ் காலந்தொட்டு நரேந்திர மோடி காலம் வரை தடையின்றி அமல்படுத்தி வருகின்றனர். அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவே நீதிபதிகளும் இத்தகைய தேசவிரோத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு ஆதரவாகப் பல்வேறு தீர்ப்புகளை எழுதியுள்ளனர். அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும், நீதிமன்றங்களும் கூட்டுச் சேர்ந்துதான் தேசவிரோத மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளைப் பறித்து வருகின்றனர். பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் அரசு எந்திரத்தை வசப்படுத்துவதற்கும், நீதித்துறையையும் சட்டங்களையும் வளைப்பதற்கும் கொடுக்கும் விலைதான் அண்மையில் நடைபெற்று வரும் மாபெரும் ஊழல்களாகும். நீதிபதிகளும் நீதித் துறையும் சீரழிவதற்கான காரணங்களும் இதுதான்.

மேலும், இந்திய அரசாங்கம் மொழிவழி தேசங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைக் கூடமாகத் திகழ்வதுடன் சிறப்பு இராணுவச் சட்டங்கள் மூலம் காஷ்மீர் தேசிய இனம், வடகிழக்கு மாநிலங்கள் மீது கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. சாதி, தீண்டாமைக் கொடுமைகள், ஆணவக் கொலைகள் குறித்து சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே நீதி மன்றங்கள் செயல்படுகின்றன. இராணுவ சிறப்பதிகாரச் சட்டம், எஸ்மா போன்ற அடக்குமுறை சட்டங்களை வைத்து ஒடுக்குகிறது. இவ்வாறு இந்திய அரசும், நீதிமன்றங்களும் புதியகாலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்வதற்காக ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களின் மீது நடத்தும் தாக்குதல்களின் ஒரு பகுதிதான் வழக்கறிஞர்களின் மீதானத் தாக்குதலும், நீதிமன்றங்களை இராணுவமயமாக்கலும் ஆகும்.

வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆதரவாக இந்திய பார் கவுன்சில்

சென்னை உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள பாசிச வாய் பூட்டுச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சிலோ நீதிபதிகளுக்கான பார் கவுன்சிலாகச் செயல்படுகிறது. ஆனால் இதே இந்திய பார் கவுன்சில்தான் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் இந்துத்துவப் பாசிச வெறியர்களால் மாணவர் கண்ணையா குமார் தாக்கப்பட்ட போது விசாரணை இல்லாமல் தண்டிக்க முடியாது என்ற இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளைப் பாதுகாத்தது. பா.ஜ.க.வின் விசுவாசியான இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ராவும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதவெறியர்களுக்குத் துணைப் போகிறார். இந்திய பார் கவுன்சிலானது பிற்போக்கு மதவாதப் பாசிச சக்திகளுக்குத் துணைபோவதோடு ஜனநாயக ரீதியில் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. உச்ச நீதிமன்றமும் கூட இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து இந்திய சட்ட ஆணையத்திற்கு இது சம்பந்தமாகச் சட்டம் இயற்றக் கோரிக்கை அனுப்பியுள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மீது தொடுத்துள்ள அடக்குமுறைகள், ஜனநாயக உரிமைகள் பறிப்பு ஒரு தனித்த சம்பவம் அல்ல; மத்திய மாநில அரசுகள் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி அனைத்துப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதன் ஒரு பகுதியேயாகும். இத்தகைய தாக்குதல்களை வழக்கறிஞர்கள் தனித்து நின்று போராடி வெல்லமுடியாது. நாட்டை அடிமைப் படுத்தும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் உழைக்கும் வர்க்கங்கள், ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டத்துடன் வழக்கறிஞர்களும் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும். வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறைகளும் மக்களைப் பாதிக்கக் கூடியதேயாகும். ஆகவே மக்களும் வழக்கறிஞர்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். எனவேதான் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* சென்னை உயர் நீதிமன்றமே, வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெறு!

* 157 பேர் உள்ளிட்டு அனைத்து வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்கத்தைக் கைவிடு!

* சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் நிறுத்தியுள்ள மத்திய காவல் படையைத் திரும்பப் பெறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு ஆகஸ்ட், 2016